நாட்டில் ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு முடிந்து 50 நாட்களுக்கு பின் ஆண்டின் கடைசி நாளான 31-ந்தேதி இரவு(நாளை) 7.30 மணி அளவில் பிரதமர் மோடி மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றுகிறார் என செய்திகள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார் அல்லது நாளை உரையாற்றுகிறாரா என்பது தெரியவில்லை.

எதிர்பார்ப்பு

இந்த உரையின் போது, ரூபாய் நோட்டு தடைக்கு பின், நாட்டில் நிலவும் பணத்தட்டுப்பாட்டை எப்படித் தீர்ப்பது, அடுத்து செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள், அடுத்து எடுக்கப்போகும் நடவடிக்கைகள் குறித்து அறிவிப்புகள் வெளியாகலாம் எனக் மத்தியஅரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திடீர் அறிவிப்பு

நாட்டில் கருப்பு பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் வகையில், கடந்த நவம்பர் 8-ந் தேதி இரவு, பிரதமர் மோடி புழக்கத்தில் இருந்த ரூ. 500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்து நாட்டில் உள்ள 130 கோடி மக்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்தார்.

பணத்தட்டுப்பாடு

அடுத்த 50 நாட்களுக்கு மக்கள் பொறுமையுடன் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அதன்பின் அனைத்தும் இயல்புக்கு வந்துவிடும் என மோடி தெரிவித்தார். அதைத்தொடர்ந்து மக்கள் தங்களிடம் உள்ள செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

ஏ.டி.எம்களில் தனிநபர் ஒருவர் ரூ.2500, வங்கியில் வாரத்துக்கு ரூ.2400 மட்டுமே எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இருந்தபோதிலும், கடந்த 50 நாட்களாக கடும் பணத்தட்டுப்பாட்டில் மக்கள் பெரும் அவதிப்பட்டனர்.

50 நாட்கள்

ரிசர் வங்கியும் கடந்த 50 நாட்களில் ஏறக்குறைய 46 முறை அறிவிப்புகளை மாற்றி மாற்றி அறிவித்து மக்களை திக்குமுக்காடச் செய்தது.

கட்டுப்பாடுகள் நீக்கப்படுமா?

இந்நிலையில் நாளையுடன் பிரதமர் மோடி கூறிய 50 நாட்கள் முடிகிறது. அதனால், வங்கிகள், ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, தேவைக்கு ஏற்ப மக்கள்பணம் எடுக்கலாம் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இன்று? நாளையா?

இந்த சூழலில், பிரதமர் மோடி நாளை அதாவது புத்தாண்டுக்கு முதல் நாள் இரவு 7.30 மணிக்கு தூர்தர்ஷன் சேனலில் மக்கள் முன் தோன்றி உரையாற்றுவார் என்று மத்தியஅரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இன்று உரையாற்றுகிறாரா? அல்லது நாளை உரையாற்றுகிறாரா? என்பது தெளிவாகவில்லை.

எச்சரிக்கை

சமீபத்தில் உத்தரப்பிரதேச பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, நான் கூறிய 50 நாட்கள் முடிந்தபின், நேர்மையற்றவர்களுக்கும், ஊழல்வாதிகளுக்கும் மிகவும் சிக்கலான காலமாக இருக்கும் எனத் தெரிவித்து இருந்தார். ஆதலால், பிரதமர் மோடியின் பேச்சு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் இந்த உரையின் போது, ரூபாய் நோட்டு தடைக்கு பின், நாட்டில் நிலவும் பணத்தட்டுப்பாட்டை எப்படித் தீர்ப்பது, அடுத்து செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள், அடுத்து எடுக்கப்போகும் நடவடிக்கைகள் குறித்து அறிவிப்புகள் வெளியாகலாம் எனக் மத்தியஅரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.