கடந்த நவம்பர் 8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதை தொர்ந்து கையில் இருப்பு உள்ள பணத்தை அனைத்து வங்கிகளிலும் டெபாசிட் செய்து மாற்றி கொள்ளலாம் என அறிவித்தார். இதையொட்டி 2000 ரூபாய் புதிய நோட்டுகளை ரிவர்வ் வங்கியும் வெளியிட்டது.

அப்போது, கையில் அதிகளவு பணம் வைத்திருந்தவர்கள் பெரும் கலக்கம் அடைந்தனர். குறிப்பிட்ட தொகைக்கு மேல், பணத்தை டெபாசிட் செய்தால், வருமான வரித்துறை ரெய்டு வரும் என எச்சரிக்கப்பட்டது. இதனால், பணத்தை பதுக்கி வைத்தவர்கள், வெளியில் சொல்ல முடியாமல் தவித்தனர்.

ஆனால், பல தொழிலதிபர்கள், வங்கி அதிகாரிகளை கையில் போட்டு கொண்டு, தங்களிடம் இருந்த கருப்பு பணத்தை மாற்றிவிட்டனர். ஆனால், நடுத்தர மக்கள், தினமும் 5000 ரூபாய்க்காக அதிகாலை முதல் மாலை வரை வங்கியின் முன் காத்திருக்கும் அவலம் நிலவி வருகிறது.

இதற்கிடையில், டிசம்பர் 30ம் தேதி வரை வங்கிகளில் பணத்தை மாற்றிக் கொள்ளலாம். 50 நாட்களில் நிலைமை சரியாகிவிடும் என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார்.

ஆனால், பிரதமர் மோடி கொடுத்த காலக்கெடு இன்றோடு முடிகிறது. மோடி சொன்ன அந்த நாள் வந்து விட்டது. இதுவரை எந்த அரசும், எந்த அதிரடி நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று புலம்பிக் கொண்டிருந்த மக்கள், மோடியின் நடவடிக்கைக்கு மனதளவில் நிச்சயம் ஆதரவு அளித்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.

வங்கியில் கால்கடுக்க நிற்கும்போது வேதனை தெரிவித்தாலும், நிச்சயம் இந்த நடவடிக்கையால் ஒரு நல்ல மாற்றம் ஏற்படும் என்று நம்பினார்கள். அதனால்தான், பெரிய அளவில் இதுவரை எந்த அசம்பாவிதங்களும், வன்முறைகளும் அரங்கேறவில்லை. அன்றுமுதல் இன்று வரை மோடியின் நடவடிக்கையால் நடந்தது என்ன…? ஒரு சிறிய அலசல்.

நவம்பர் 10ம் தேதி முதல் 30ம் தேதி வரை சுமார் 1.77 லட்சம் பேர், தாங்கள் வங்கிகளில் வாங்கிய ரூ.25 லட்சம் வரையிலான கடன் தொகைகளை பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அடைத்துள்ளனர். இதன் மூலம் பெறப்பட்ட மொத்த கடன் தொகை ரூ.50ஆயிரம் கோடி.

பழைய ரூபாய் நோட்டுகளை கொண்டு அதிகளல் வருமான வரி தொகை செலுத்தப்பட்டுள்ளது.

வங்கிகளில் அதிக பணத்தை டெபாசிட் செய்த சுமார் 5 ஆயிரம் பேருக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

நவம்பர் 8ம் தேதி முதல் நாடு முழுவதும் 983 அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன. நவம்பர் 8ம் தேதிக்கு பின் வருமான வரித்துறையினரால் ரூ.4,172 கோடி மதிப்புள்ள சொத்து மற்றும் பெரிய அளவிலான தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

பல பெரும் புள்ளிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சேதனை நடத்தினர்.

கருப்பு பண பதுக்கல் அனைத்து, சேற்றில் தெளிவாக தண்ணீர் போல் இருந்த்து. அதில் கல்லை வீசியதும், கலங்கி அதில் உள்ள துர்நாற்றம் வெளியே வந்ததுபோல் அனது, மோடியின் இந்த நடவடிக்கை என்பது உண்மையே.

நிலைமை சரியாக இன்னும் 50 நாட்கள் ஆகும் என்ற காலக்கெடு வேண்டுமென்றால் சற்று நீட்டிக்கப்படலாம். ஆனால், உண்மையில் நடந்த்து அனைத்தும் நல்லவையே… இனி நடக்கப்போவதும் நல்லவையாகவே அமையே வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஆனால், பொதுமக்களின் நிலை, இன்றும் வரிசையில் நிற்பதுதான்.