Asianet News TamilAsianet News Tamil

மணிப்பூரில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவு - நாளை வாக்குப்பதிவு

Manipur has completed the first phase of the campaign - 38 constituencies voting tomorrow
manipur has-completed-the-first-phase-of-the-campaign--
Author
First Published Mar 2, 2017, 9:52 PM IST


மணிப்பூரில் முதல் கட்ட சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரம் நேற்றுடன் நிறைவு பெற்றது. நாளை 38 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

2 கட்டமாக...

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 15 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. மாநில முதல் அமைச்சராக ஒக்ரம் இபோபி சிங் உள்ளார்.

இந்நிலையில், இங்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் முதல் கட்டமாக 38 தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தொகுதிகள் அனைத்தும் இம்பால் பள்ளத்தாக்கு மற்றும் மலைப் பகுதிகளில் உள்ளவை.

காங்.-பாஜக

ஆட்சியைக் கைப்பற்றுவதில் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி காணப்படுகிறது. தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலை 3 மணியுடன் நிறைவு பெற்றது.

அமைதி உடன்படிக்கை

இதில் மத்திய அரசும், நாகா தீவிரவாதிகளும் ஏற்படுத்திக் கொண்ட அமைதி ஒப்பந்தம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த நவம்பர் மாதத்தின்போது மணிப்பூருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளை மறித்து நாகா தீவிரவாத அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

இதனால் அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டது. கடந்த 18 ஆண்டுகளாக அவர்கள் பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டனர்.

80 கட்டங்களாக...

அவர்களுடன் 80 கட்டமாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியை தழுவின. இந்நிலையில் மத்தியில் மோடி அரசு அமைந்த பின்னர் கடந்த 2015 ஆகஸ்ட் மாதத்தில் மத்திய அரசுக்கு நாகா தீவிரவாதிகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

இதில் உள்ள அம்சங்கள் என்ன என்பது பற்றி மாநில அரசுக்கு தெரிவிக்கப்படவில்லை. இந்த ஒப்பந்தம் ஒரு சாதனை என்று பாஜக தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டனர்.

கேள்வி-சந்தேகம்

ஆனால், ஒப்பந்தம் ரகசியமாக வைக்கப்பட்டிருப்பது ஏன்? என காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி எழுப்பினர்.

மேலும் மணிப்பூரின் ஒருசில பகுதிகளை நாகா தீவிரவாதிகளுக்கு அளிக்கும் வகையில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக அவர்கள் சந்தேகம் தெரிவித்தனர். இத்தகைய சூழலில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவு பெற்று நாளை 38 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios