‘மான் கி பாத் இல்லை’; ‘மோடி கி பாத்’ - மம்தா பானர்ஜி கடும் சாடல்
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், “ மோடிஜி இந்திய பொருளாதாரத்தையும், வளர்ச்சியையும் அழித்துவிட்டீர்கள். தவறான தொழில்நுட்பத்தை விளம்பரப்படுத்தி வருகிறீர்கள். நாங்கள் உங்களை நம்பவில்லை. தொழில்நுட்பமும், வளர்ச்சியும் தேவைதான். இது போல் ரூபாய் நோட்டு மதிப்பிழத்தல் மூலம் வரும் தொந்தரவுகளை மக்கள் விரும்பவில்லை.
‘மனதோடு பேசுகிறேன்’(மான்கி பாத்) என்ற மோடியின் வானொலி நிகழ்ச்சி இப்போது ‘மோடியின் பேச்சு’(மோடி கி பாத்) என்று மாறிவிட்டது. அரசு இயந்திரத்தை மோடி தவறாகப் பயன்படுத்துகிறார். லட்சக்கணக்கான மக்களின் பிரச்சினைகளையும், வலிகளையும் தீர்ப்பதற்கு பதிலாக சுயவேதாந்தத்தைப் பேசி சுயவிளம்பரம் தேடுகிறார். இந்த நாட்டின் பெண்கள் உங்களுக்கு நிச்சயம் பதிலடி கொடுப்பார்கள் '' எனத் தெரிவித்தார்.