மலப்புரம் எம்.பி. தொகுதி இடைத் தேர்தலில் முஸ்லிம் லீக் குஞ்சாலிகுட்டி வெற்றி
கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் எம்.பி. தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு லட்சத்து 71 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று அத்தொகுதியை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
மலப்புரம் தொகுதி எம்.பி.யாக இருந்த இ.அகமது மரணம் அடைந்ததை தொடர்ந்து அத்தொகுதியில் ஏப்ரல் 12-ல் இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தொகுதியில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த குஞ்சாலிக்குட்டி தனக்கு அடுத்தபடியாக வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.பி. பைசாலை விட ஒரு லட்சத்து 71 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
கடந்த தேர்தலில் முஸ்லிம் லீக் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து போட்டியிட்டதை தொடர்ந்து, இந்த இடைத்தேர்தலிலும் இத்தொகுதியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு காங்கிரஸ் கட்சி விட்டுக் கொடுத்தது. இந்த வெற்றியின் மூலம் மலப்புரம் தொகுதியை முஸ்லிம் லீக் கட்சி தக்கவைத்துக்கொண்டுள்ளது. இத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் என்.ஸ்ரீபிரகாஷ் 3-வது இடத்தைப் பிடித்தார்.
கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் முஸ்லிம் லீக் வேட்பாளர் அகமது தனக்கு அடுத்தபடியாக வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஒரு லட்சத்து 94 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.