ஒரே ஒரு மின்னல்தான் ! 8 பேரின் உயிரைப் பறித்தது… ஜார்கண்டில் சோகம் !!
ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று திடீரென இடி, மின்னலுடன் மழை கொட்டித் தீர்த்தது. அப்போது பலத்த மின்னல் ஒன்று தாக்கியதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜார்கண்ட் மாநிலம் கார்வா மாவட்டத்துக்கு உட்பட்ட பஸ்சி கிராமத்தில் திடீரென இடி–மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது இந்த கிராமத்தை சேர்ந்த சுமார் 10 பேர் அங்குள்ள ஒரு மரத்தடியில் மழைக்காக ஒதுங்கினர். அப்போது திடீரென பலத்த மின்னல் ஒன்று அந்த மரத்தை தாக்கியது.
இதில் மழைக்காக நின்றிருந்தவர்களையும் மின்னல் தாக்கியது. இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பலியாகினர்.
மீதமுள்ள 4 பேரும் படுகாயமடைந்து துடித்தனர். அவர்கள் அனைவரும் கார்வா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
மேலும் இரண்டு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அம்மாநில முதலமைச்சர் ரகுபர் தாஸ் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ரகுபர் தாஸ் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடும் அறிவித்தார். மின்னல் தாக்கி 8 பேர் பலியான சம்பவம் கார்வா மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.