கொரோனா பரவல் குறைந்து வருவதால் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்திக்கொள்ளலாம் என்றும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்காமல் இருக்கலாம் என்றும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.  

இந்தியாவில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில், ஏற்கனவே நடைமுறையில் இருந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படுகின்றன. அவ்வகையில் மேலும் தளர்வுகளை அறிவிப்பது குறித்து மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதி உள்ளார்.

அதில், கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அளிக்கலாம் அல்லது கூடுதல் கட்டுப்பாடுகளை கைவிடலாம் என கூறி உள்ளார்.புதிய பாதிப்புகள், சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, கூடுதல் கட்டுப்பாடுகளை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மதிப்பாய்வு செய்து திருத்தவோ அல்லது முடிவுக்குக் கொண்டு வருவதோ பயனுள்ளதாக இருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஜனவரி 21ம் தேதி முதல் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. கடந்த வாரம், சராசரி தினசரி பாதிப்பு 50,476 ஆக இருந்தது. தற்போது கடந்த 24 மணி நேரத்தில்30,615 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. தினசரி பாதிப்பு விகிதம் 3.63 சதவீதமாக உள்ளது. மேலும் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் கொரோனா பாதிப்பு நிலவரத்தை அந்தந்த வரம்புகளுக்குள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். 

தினசரி நோய்த்தொற்றின் பரவலை மதிப்பாய்வு செய்ய வேண்டும். பரிசோதனை, கண்காணிப்பு, சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றுதல் ஆகிய ஐந்து அம்ச நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில், 30,615 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கும் தகவலின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,615 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 27,409 ஆக இருந்தநிலையில், அது இன்று 11% உயர்ந்து பதிவாகியுள்ளள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 82,988 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,18,43,446 அதிகரித்துள்ளது. இது நேற்றைவிட சற்று அதிகமாகும்.

அதேநேரத்தில் நாடு முழுவதும் இதுவரை 173.86 கோடி தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் 41,54,476 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 514 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக நேற்றைய தினம் 347 பேர் என்றிருந்த உயிரிழப்பு எண்ணிக்கை, இன்று 150-க்கும் மேல் அதிகரித்துள்ளது.