பெண்ணின் விலை 3 லட்சம்...! தெலுங்கானாவிலிருந்து சவுதிக்கு விற்பனை செய்த ஏஜென்ட்..!
3 லட்சம் ரூபாய்க்கு, ஒரு பெண்ணை விற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவில் வேலைக்கு அனுப்புவதாக கூறி ஐதராபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், ரூ.3 லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் பாபாநகரைச் சேர்ந்தவர் சல்மா பேகம். இவருக்கு வயது 39. இப்பெண்ணைவெளிநாட்டில் வேலைக்கு அனுப்புவதாக இவரை ஏமாற்றி அக்ரம், ஷாபி என்ற ஏஜன்ட்கள் சவுதி அரேபியாவிற்கு அனுப்பி உள்ளனர். ஆனால் அங்கு சென்ற பிறகுதான், தன்னை 3 லட்சம் ரூபாக்கு விற்றுள்ளனர் என செய்தியை அறிந்துள்ளார்.
இந்நிலையில், அங்கிருந்து பல முறை தன் மகளுக்கு மெசேஜ் அனுபியுள்ளார். தன் தாய் விற்கப்பட்டதை அறிந்த மகள் சமீனா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
3 லட்சத்திற்கு விற்பனை:
இது குறித்து மகள் சமீனா கருத்து தெரிவித்துள்ளார். அப்போது, என் அம்மா சவுதியில் ஒருவர் வீட்டில் வேலை செய்து வருகிறார். ஆனால் அந்த முதலாளி தன் தாயை அடித்து துன்புறுத்துவதாக ஒரு ஆடியோ மெசேஜ் அனுப்பியுள்ளார் என தெரிவித்தார். பின்னர், இது தொடர்பாக ஏஜன்ட்களிடம் தான் முறையிட்டதும், பின்னர் போலீசில் புகார் செய்யப்பட்டதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய சமீனா, பிப்ரவரி 20 ம் தேதி என் அம்மா வீட்டுக்கு வந்து விடுவார் என கூறினார்கள். ஆனால் என் அம்மா இப்போது வரை வரவில்லை. கான்ட்ராக்ட் முறையில் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் முதலாளி அடித்து துன்புறுத்துவதாக என் அம்மா தகவல் அனுப்பி உள்ளார். ஏஜன்ட்கள் அவரை ரூ.3 லட்சத்திற்கு விற்றதும் பின்னர் தான் எங்களுக்கு தெரிய வந்தது.
என்னை இந்தியா அழைத்து வர இந்திய அரசின் உதவியை நாடு என என் அம்மா ஆடியோ மெசேஜ் அனுப்பி இருந்தார். அதற்கான முயற்சியை எடுத்து வருகிறேன். தெலுங்கானா அரசும் மத்திய அரசும் என் அம்மாவை மீட்க உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன் என சமீனா தெரிவித்துள்ளார்