நுபுர் ஷர்மாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்… கொல்கத்தா காவல்துறை அதிரடி!!
நபிகள் குறித்து சர்ச்சை கருத்து கூறியதாக பாஜகவின் செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நுபுர் ஷர்மாவுக்கு கொல்கத்தா காவல்துறை லுக்அவுட் நோட்டீஸை வெளியிட்டுள்ளது.
நபிகள் குறித்து சர்ச்சை கருத்து கூறியதாக பாஜகவின் செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நுபுர் ஷர்மாவுக்கு கொல்கத்தா காவல்துறை லுக்அவுட் நோட்டீஸை வெளியிட்டுள்ளது. முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்து கூறியதாக பாஜகவின் செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து நுபுர் சர்மா நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவித்து நர்கெல்டங்கா காவல் நிலையத்திலும், பின்னர் கொல்கத்தா காவல்துறையின் அதிகார வரம்பிற்குட்பட்ட ஆம்ஹெர்ஸ்ட் தெரு காவல் நிலையத்திலும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. தனிநபர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விளம்பரத்திற்காக பேசினாரா நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்
கொல்கத்தா காவல்துறையின் அதிகார வரம்பில் உள்ள வெவ்வேறு காவல் நிலையங்களின் கீழ் சர்மா மீது 10 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் காவல்துறையில் ஆஜராகும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார். ஆனால் நுபுர் ஷர்மா இரண்டு சம்மன்களையும் புறக்கணித்து, காவல்துறையில் ஆஜராக கூடுதல் அவகாசம் கோரினார். தொடர்ந்து நான்கு முறை அழைப்பு விடுத்தும் விசாரணைக்கு ஆஜராகாததால், கொல்கத்தா காவல்துறை லுக்அவுட் நோட்டீஸை வெளியிட்டது. பல முறை சம்மன் அனுப்பியும் எங்கள் அதிகாரிகள் முன் ஆஜராகாததால் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட பின்னர் ஆம்ஹெர்ஸ்ட் ஸ்ட்ரீட் மற்றும் நர்கெல்டங்கா காவல் நிலையங்கள் தனித்தனியாக அவருக்கு சம்மன் அனுப்பியதாகவும் இரண்டு காவல் நிலையங்களும் தலா இரண்டு முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதை அடுத்து நுபுர் சர்மாவுக்கு கொல்கத்தா காவல்துறை லுக்அவுட் நோட்டீஸை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: நுபுர் சர்மா வார்த்தைகள் ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கிவிட்டது; லெப்ட் ரைட் வாங்கிய நீதிமன்றம்
விசாரணையில் தேடப்படும் அல்லது தலைமறைவாக இருக்கும் நபருக்கு எதிராக சட்ட அமலாக்க முகமையால் லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டு அந்த நபர் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கிறது. இதனிடையே தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தொடர்ந்து தனக்கு அச்சுறுத்தல்கள் வந்து கொண்டு இருப்பதால், அவர் மீதான வழக்குகளை டெல்லி நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று நுபுர் சர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.