முதல் நாளிலேயே ‘கலெக்ஷனை அள்ளிய’ கொச்சி மெட்ரோ 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உற்சாகப் பயணம்
கேரள மாநிலம், கொச்சி மெட்ரோ ரெயில் சேவை முதல்நாளிலேயே கலெக்ஷனை அள்ளியது, ஏறக்குறைய 60 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் ஆர்வத்துடன், உற்சாகமாகப் பயணித்தனர்.
கொச்சியில் பழவிராட்டம் முதல் ஆலுவா நகர் வரை 25 கி.மீட்டருக்கு மெட்ரோரெயில்சேவை கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. பிரதமர் மோடி கலந்து கொண்டு சேவையை தொடங்கிவைத்தார். ஆனால், வர்த்தகரீதியான சேவை திங்கள்கிழமைதான் தொடங்கியது.
கதவைத் திறந்தால் சென்டை மேளம், மெட்ரோ பாலத்தில் செடி வளர்ப்பு, குறைந்த கட்டணம், அதிகமான பெண் பணியாளர்கள், திருநங்கைகளுக்கு வாய்ப்பு பல சிறப்பு அம்சங்களுடன் கொச்சி மெட்ரோ உருவாக்கப்பட்டது.
இந்நிலையில் முதல்நாளான திங்கள்கிழமை வர்த்தகரீதியாக மெட்ரோரெயில்போக்குவரத்து தொடங்கியது. ஆலுவா முதல் பழரிவாட்டம் வரையிலான போக்குவரத்து காலை 6 மணிக்கு தொடங்கி இரவு 10 மணிவரை அனுமதிக்கப்பட்டது. முதல்நாளில் மட்டும் 62 ஆயிரத்து 320பயணிகள் வரை பயணித்துள்ளனர். ஏறக்குறைய ரூ.20 லட்சத்து 42 ஆயிரத்து 740 கட்டணமாக வசூலாகியுள்ளது.
இந்த கட்டண வசூலும், பயணிகள் எண்ணிக்கையும் திங்கள்கிழமை இரவு 7 மணி வரையிலானது. அடுத்த 3 மணிநேரத்தையும் கணக்கிடும் போது, கூடுதலாக ஒரு லட்சம் ரூபாய், 2 ஆயிரம் பயணிகள் வரை பயணித்து இருப்பார்கள் எனக்கூறப்படுகிறது.
மெட்ரோ ரெயிலில் பயணிக்க மக்கள் பழவிராட்டம் ரெயில்நிலையத்தில் நீண்டவரிசையில் காத்திருந்தனர். ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து மெட்ரோரெயிலில் பயணிக்க காத்திருந்தனர்.