இடுக்கியில் சண்டையிட்டுக் கொண்ட இரு காட்டு யானைகளில் படுகாயமடைந்த முறிவாளன் என்ற காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

கேரளா மாநிலம் மூணாறு பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே காட்டு யானைகள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் பகுதியில் முறிவாளன் கொம்பன் என்ற காட்டு யானையும், சக்கக்கொம்பன் என்ற யானையும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மாறி மாறி ஆக்ரோஷமாக சண்டையிட்டு கொண்டது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதில், முறிவாளன் பெயர் கொண்ட காட்டு யானை படுகாயமடைந்தது. படுகாயங்களுடன் கடந்த ஒரு வாரமாக சுற்றித்திரிந்த காட்டுயானை, உடல் நிலை மோசமடைந்து கீழே விழுந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே வனத்துறைக்கும், கால்நடை துறைக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த கால்நடை மருத்துவர்கள் எழுந்து நடக்க முடியாத யானைக்கு தீவிரமாக சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், முறிவாளன் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. 

உயிரிழந்த முறிவாளன் யானைக்கு உடலில் 15 இடங்களில் தந்ததால் குத்திய காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் கடந்த 21ம் தேதி 2 யானைகளுக்கும் நடைபெற்ற மோதலில் முறிவாளன் மற்றும் சக்கக்கொம்பன் காட்டு யானைக்கும் முன்பே காயம் ஏற்பட்டு நடப்பதில் சிரமம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் நடந்த மோதலில் மேலும் படுகாயமடைந்து நிலையில் உயிரிழந்துள்ளது.