5 மணிநேரம் வரிசையில் நின்றாலும் சரக்கு வாங்கியே தீருவோம் - கேரளா குடிமகன்கள் ஆவேசம்
உச்ச நீதிமன்றம் உத்தரவைத் தொடர்ந்து கேரள மாநிலத்தில் 207 மதுக்கடைகள் மூடப்பட்டது. இதனால், மதுவாங்க முடியாமல், குறிப்பிட்ட கடைகளில் குடிமகன்கள் 3 முதல் 5 மணிநேரம் வரை வரிசையில் நின்று மதுவாங்கினர். இதனால், பல நகரங்களில் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கேரளாவில் முன்பு இருந்த காங்கிரஸ் அரசு மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த முடிவு செய்தது. ஆனால், கம்யூனிஸ்டு ஆட்சி அமைந்த பின், தீவிர மதுவிலக்கு தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில் உச்சநீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பில், தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்குள் உள்ள மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது. இந்த உத்தரவால் கேரள மாநிலத்தில் செயல்பட்டு வந்த மொத்தம் உள்ள 850 மதுக்கடைகளில் 207 கடைகள் மூடப்பட்டன.
இதனால் தாங்கள் வழக்கமாக மதுவாங்கும் கடைகள் மூடப்பட்டதால், திறந்துக்கும் மதுக்கடையில் மதுவாங்க குடிமகன்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. திறந்திருந்த மதுக்கடைகளில் மது வாங்கு வதற்காக குடிமகன்கள் கூட்டம் அலைமோதியது.
கோழிக்கோடு மாவட்டத்தில் கரிக்காங் குளம், அறையறுத்து பாலம், வடகரை, திருவம்பாடி ஆகிய பகுதிகளில் வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனை செய்யும் கடைகள், பார்கள் செயல் பட்டு வருகிறது. இங்கு குடிமகன்கள் நீண்ட வரிசை யில் காத்திருந்து மதுவாங்கினர். சில கடைகளின் முன்பு அரை கிலோமீட்டர் தூரத்திற்கு கூட்டம் இருந்ததை காண முடிந்தது. சில மதுக் கடைகள் முன்பு 4 வரிசை யில் குடி மகன்கள் காத்திருந்து மதுவாங்கி குடித்தனர்.
பல நகரங்களில் குடிமகன்கள் வரிசையில் நிற்கும் போது, ஒருவொருக்கு ஒருவர் தகராறில் ஈடுபட்டனர், சிலர் வரிசையில் நிற்காமல் மதுவாங்க வந்ததால், பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், போலீசார் வரவழைக்கப்பட்டு வரிசையை கட்டுப்படுத்தினர். ஆனால், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடமும் சிலர் தகராறில் ஈடுட்டனர்.
வரிசையில் நின்று மதுவாங்கிச் சென்ற ஒரு குடிமகன் கூறுகையில், “ நீதிமன்றமும், அரசும் எங்களின் பிரச்சினையை புரிந்துகொள்ள மறுக்கிறது. இப்படி உத்தரவுகளை போட்டால், நாங்கள் எங்கே சென்று மது வாங்குவது? என்று புலம்பியபடி சென்றனர்.