கேரளா சட்டசபை: ஏசியாநெட் நியூஸுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வெளிநடப்பு செய்த காங்கிரஸ்
ஏசியாநெட் நியூஸ் மீதான தாக்குதலால், கேரள சட்டசபையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளது.
கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள ஏசியாநெட் நியூஸ் அலுவலகத்தை கடந்த வெள்ளிக்கிழமை மாலை சுமார் 7:30 மணியளவில் இந்திய மாணவர் கூட்டமைப்பு (SFI) உறுப்பினர்கள் கொடூரமான முறையில் தாக்கினர்.
சுமார் 30க்கும் மேற்பட்ட எஸ்.எப்.ஐ உறுப்பினர்கள் குழு ஏசியாநெட் நியூஸின் அலுவலகத்திற்குள் புகுந்து பாதுகாப்புப் பணியாளர்களைத் தள்ளி, முழக்கங்களை எழுப்பி ஊழியர்களை மிரட்டினர். இதுகுறித்து ஏசியாநெட் நியூஸ் நாளிதழின் ரெசிடென்ட் ஆசிரியர் அபிலாஷ் ஜி நாயர் அளித்த புகாரின் பேரில் பாலாரிவட்டம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
எஸ்.எப்.ஐ உறுப்பினர்கள் மீது ஐபிசியின் 143 (சட்டவிரோத கூட்டம்), 147 (கலவரம்) மற்றும் 149 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எஸ்.எப்.ஐ அமைப்பினர் பாதுகாப்பு அதிகாரிகளை மீறி அலுவலகத்திற்குள் புகுந்து தாக்கும் சிசிடிவி காட்சிகள் புகாருடன் ஆதாரமாக கொடுக்கப்பட்டுள்ளது.
ஏசியாநெட் நியூஸ் அலுவலகம் சென்று சோதனையிட்டு கம்ப்யூட்டர்களைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்று கோழிக்கோடு போலீசாருக்கு உத்தரவு வந்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆதரவு பெற்ற எம்எல்ஏ பி. வி. அன்வர் காவல்துறை டிஜிபியிடம் அளித்த புகாரின் பேரில் கோழிக்கோடு ஈசியாநெட் நியூஸ் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
இதையும் படிங்க..Kushboo: 8 வயதில் பாலியல் தொல்லை கொடுத்தார் என் தந்தை.. நடிகை குஷ்பு வெளியிட்ட பரபரப்பு தகவல்
பொதுவாக, ஒரு இடத்தில் விதிமீறல் நடந்தால் யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம். ஆனால், அத்தகைய புகாரில் எஃப்ஐஆர் பதிவு செய்த பின்புதான், காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும். முதலில் புகார் கொடுத்தவரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய வேண்டும். ஆனால் அதைக்கூட காவல்துறை பெறவில்லை. நவம்பர் 2022 இல் ஏசியாநெட் நியூஸ் வெளியிட்ட போதைப்பொருள் எதிர்ப்புப் செய்தியில் குறிப்பிடப்பட்ட வழக்குக்கும் எம்.எல்.ஏ.பி. வி. அன்வருக்கும் நேரடியாகத் தொடர்பு இல்லை.
புகார்தாரரின் வாக்குமூலம் பெறப்பட்டு, முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்ட பிறகுதான் போலீசார் அடுத்தகட்ட நடவடிக்கைக்குச் செல்வது வழக்கம். ஆனால் அன்வரின் தரப்பில் எழுத்துபூர்வ புகாரைக்கூடப் பெறாமல் ஏசியாநெட் செய்தி அலுவலகத்தைச் சோதனையிட போலீஸார் விசாரணை நடத்தினர்.
கோழிக்கோடு கமிஷனர் அலுவலகத்தில் சனிக்கிழமை இரவு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை காலை வரை தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதால் ஏசியாநெட் நியூஸ் அலுவலகத்துக்கு போலீஸார் வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில் இன்று கூடிய கேரள சட்டசபையில், ஏசியாநெட் நியூஸுக்கு எதிராக திட்டமிட்ட நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் சட்டசபையில் தெரிவித்தார்.
ஏசியாநெட் நியூஸ் மீதான தாக்குதலால், சட்டசபையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. ஆளுங்கட்சியின் பாதுகாப்பில் ஊடக நிறுவனங்களுக்கு எதிரான வன்முறை நடக்கிறது. பொய்யான செய்திகளை பரப்புவது சரியல்ல. ஒலிபரப்பில் தொழில்நுட்பக் கோளாறு இருந்தால் சொல்லியிருக்கலாம் என்று கூறியுள்ளார் சட்டசபையில் பி.கே.பஷீர் எம்.எல்.ஏ.
இதையும் படிங்க..பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் டார்கெட்! எல்லைப் பகுதியில் ஊடுருவ முயலும் பாகிஸ்தான்? எல்லையில் தொடரும் பதற்றம்!