கன்னடர்களை வேலைக்கு சேர்த்தால் விருது தருவோம்... தனியார் நிறுவனங்களுக்கு கர்நாடக அரசு அதிரடி ஆஃபர்!
கன்னடமொழி பேசும் மக்களை வேலைக்கு சேர்க்கும் தனியார் நிறுவனங்களுக்கு வெகுமதியும், விருதும் அளிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
முன்னதாக, தனியார் நிறுவனங்களில் குரூப் சி, டி, பிரிவில் 100 சதவீதம் கன்னடர்களுக்கே வாய்ப்பு என்று அறிவித்து இருந்தது. இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்பதால், கன்னட மக்களை மட்டும் வேலைக்கு எடுக்க தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து கர்நாடக சட்டத்துறை அமைச்சர் டி.பி. ஜெயச்சந்திரா நிருபர்களிடம் கூறியதாவது-
கர்நாடக தொழில்துறை வேலைவாய்ப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்தோம். அதன்படி, 100 சதவீதம் கன்னடர்களுக்கே வேலை என்ற திட்டம் முன்மொழியப்பட்டது.
1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை கன்னடத்தில் படித்தவர்களுக்கே வேலை வாய்ப்பு என்கிற திட்டம், முதல்வரும், கன்னட மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் சித்தராமையின் சிந்தனையாகும். இது அரசியலமைப்புச் சட்டம், சமத்துவ உரிமை, சமமான வாய்ப்பு ஆகியவற்றை மீறுவதாகும். ஆதலால், அந்த திட்டம் கைவிடப்பட்டது.
இதையடுத்து, புதிய திட்டத்தை தொழிலாளர் துறை கொண்டு வந்து இருக்கிறது. அதாவது, கன்னடமொழி பேசும் மக்களை தனியார் நிறுவனங்கள் வேலைக்கு எடுத்தால், அந்த நிறுவனங்களுக்கு வெகுமதி, விருதுகள் அளிக்கப்படும்.
அதாவது கர்நாடக மாநிலத்தில் குறைந்தபட்சம் 5 முதல் 10 ஆண்டுகள் வரை குடியிருந்து இருக்க வேண்டும். கன்னடமொழி பேசத், எழுதத் தெரிந்து இருக்க வேண்டும். அத்தகைய மனிதர்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்களுக்கு பரிசுகள் அளிக்கப்படும்.
அதாவது, இந்த திட்டத்துக்கு “ஆஷா தீபா” என்று பெயரிடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் வசிப்பவர்களை வேலைக்கு எடுக்கும் தனியார் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். அதாவது, கர்நாடக மக்களை வேலைக்கு எடுத்து ஊதியம் தரும்போது, அந்த ஊதியத்தில் 18 சதவீதத்தை அரசே வழங்கும்.
மீதமுள்ள தொகையை மட்டும் நிறுவனம் வழங்கினால் போதும். இந்த ஊக்கத் தொகை 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இதன் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு ஊதியம் அளிக்கும் சுமையை அரசு குறைக்கும். மேலும், தொடர்ந்து அதிகமான கர்நாடக மக்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்களுக்கு விருதுகளும் அளிக்கப்படும்.
அரசு அளிக்கும் இந்த தொகை, தனியார் நிறுவனங்கள் தங்களின் லாபத்தை பெருக்கிக் கொள்ள தரப்படுகிறது, குறுகிய காலத்தில் வேலையாட்களை வேலையில் இருந்து நீக்கிவிடக்கூடாது என்பதற்காகவும் இந்த தொகை கொடுக்கப்படுகிறது.
கன்னடர்களை மட்டும் வேலைக்கு எடுப்பது என்ற திட்டத்துக்கு பதிலாகவே நீண்ட கால நலன் என்ற வார்த்தையின் அடிப்படையில் இந்த திட்டம் என்று வைத்துக்கொள்ளலாம். நாட்டில் எந்த மாநிலமும் செய்யாத ஒரு திட்டத்தை நாங்கள் செயல்படுத்துகிறோம்.
இந்த திட்டத்துக்காக ரூ.200 கோடியை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கன்னடர்கள், மற்ற மாநிலத்தவர்கள் என்று பாகுபாடு காட்டவில்லை. 5 முதல் 10ஆண்டுகள் வரை கர்நாடகத்தில் வசித்தால் அவர்களும் கன்னடர்கள்தான். நான் எந்த சர்ச்சையையும் உருவாக்க விரும்பவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.