இயேசு மட்டும் தான் உண்மையான கடவுள்.. வம்பில் சிக்கிய பாதிரியார் பொன்னையா - கடுப்பான பாஜக !
150 நாள் ‘பாரத் ஜோடோ யாத்திரை’ மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 9) தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் சர்ச்சைக்குரிய கத்தோலிக்க பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை சந்தித்தார்.
தமிழ்நாட்டு பாதிரியாருடன் ராகுல் காந்தி உரையாடிய வீடியோ கிளிப் வைரலாகி வருகிறது. அதில் ராகுல் காந்தி, "இயேசு கிறிஸ்து கடவுளின் வடிவமா? அது சரியா?" என்று கேட்பதைக் காணலாம். அதற்கு தமிழக பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, "அவர் தான் உண்மையான கடவுள்" என்று பதிலளிக்கிறார்.
பொன்னையா, "கடவுள் தன்னை ஒரு மனிதனாக, உண்மையான மனிதனாக வெளிப்படுத்துகிறார்... சக்தியைப் போல் அல்ல... அதனால் நாம் ஒரு மனிதனைப் பார்க்கிறோம்" என்று கூறுகிறார்.
பொன்னையா கடந்த காலங்களில் சர்ச்சைக்குரிய அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, திமுக அமைச்சர் மற்றும் பலர் மீது வெறுப்பு உணர்வுகளை தூண்டும் வகையில் பேசியுள்ளார். இதற்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் மதுரை கல்லிக்குடியில் கைது செய்யப்பட்டார். ராகுல் காந்தி பாதிரியார் பொன்னையாவை புலியூர்குறிச்சியில் உள்ள முட்டிடிச்சான் பாறை தேவாலயத்தில் கடந்த வெள்ளி கிழமை சந்தித்தபோது, பாதிரியார் அவ்வாறு பேசியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா ராகுல் காந்தியை தாக்கி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “ராகுல் காந்தியை சந்தித்த ஜார்ஜ் பொன்னையா, சக்தி (மற்றும் பிற இந்துக் கடவுள்கள்) போல் அல்லாமல் இயேசு மட்டுமே கடவுள் என்று கூறுகிறார்” என்று பதிவிட்டுள்ளார். மேலும், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ, பாரத் டோடோ-வாக மாறியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
பாஜகவின் தேசிய தகவல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான மேற்குவங்க பொறுப்பாளர் அமித் மால்வியாவும் கண்டித்துள்ளார். இவர் தனது டுவிட்டரில், ''பெரும்பான்மை சமூகத்தின் மீதும், அவர்களின் நம்பிக்கைகள் மீதும் உள்ள அவமதிப்புக்கு பெயர் பெற்ற ஒரு சர்ச்சைக்குரிய பாதிரியாரை சந்தித்தால், ராகுல் காந்தியின் “பாரத் ஜோடோ” யாத்திரை வெட்கத்திற்குரியது. எவ்வாறு பெரிய சமுதாயத்திற்கு சேவை செய்பவர்கள் ஒற்றுமையைக் கொண்டுவர முடியும்?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
வெளியாகி இருக்கும் வீடியோவில் பதிவானதற்கு எந்த சம்பந்தமும் இல்லை. பாரத் ஜோடோ யாத்திரை வெற்றிகரமாக துவங்கி நடந்து வருகிறது. இதை பொறுத்துக் கொள்ளாத பாஜக வழக்கம் போல் அவநம்பிக்கையுடன் நடந்து கொள்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.