மகர விளக்கு பூஜை - பக்தர்களின் வருகை அதிகரிப்பால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
மகர விளக்கு பூஜை - பக்தர்களின் வருகை அதிகரிப்பால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
மகர விளக்கு பூஜையை முன்னிட்டு, புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால், முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கேராளவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில், மண்டல பூஜை விழாவை முன்னிட்டு, கடந்த மாதம் 15-ம் தேதி நடை திறக்கப்பட்டு, நாள்தோறும் பூஜைகள் நடைபெற்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கடந்த 26-ம் தேதியுடன் மண்டல பூஜை நிறைவடைந்ததை அடுத்து, அன்று இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று திறக்கப்பட்டது. மாலை 5.30 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. பின்னர், இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு நெய்யபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகின்றன. புகழ்பெற்ற மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம், வரும் 14- ந் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்து உள்ளது. பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், பக்தர்கள் அதிகம் கூடும் பம்பை, சபரிமலை, எருமேலி, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில், 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.