இந்தியாவில் ஐ.எஸ். ஆதரவாளர்கள் 67 பேர் கைது : ராஜ்நாத் சிங் பகீர்
ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்து இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில், மாநில போலீஸ் டி.ஜி.பி.க்களின் 3 நாள் மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் எல்லை தாண்டிய பயங்கரவாதம், ஊடுருவல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
இம்மாநாட்டின் முதல் நாளான நேற்று, மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், ஐ.எஸ். தீவிரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்டு, இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் 67 பேர், இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்றும் தெரிவித்தார்.
நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசுடன், மாநில அரசுகள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் திரு. ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டார்.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால், பயங்கரவாதிகள் முடங்கி போயுள்ளதாக தெரிவித்த அவர், பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை மாற்ற பயங்கரவாதிகள் முயற்சி செய்வதாகவும், அதனை முறியடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.