வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள் ‘புலம்பல்’ - கழிவறை கட்டி காலாண்டுக்கு அறிக்கை அனுப்ப அரசு உத்தரவு
பிரதமர் மோடியின் ‘ஸ்வச் பாரத்’ திட்டத்தில்(தூய்மை இந்தியா) ஊக்கப்படுத்த, அரசு வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள் தங்களின் கிளைகளுக்கு அருகே மக்கள் பயன்படுத்தும் வகையில் பொதுக் கழிவறைகளை கட்டிக் கொடுக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நிர்வகிக்க வேண்டும்
கழிவறை கட்டுவதோடு மட்டுமல்லாமல், அதை வங்கி நிர்வாகம் பராமரிப்பு செய்து, காலாண்டுக்கு ஒருமுறை வரவு,செலவு அறிக்கை அனுப்பும்போது, கழிவறை கட்டியது தொடர்பாகவும் அறிக்கை அனுப்ப வேண்டும் என நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதனால், காப்பீடு நிறுவனங்கள், வங்கிகள் இதை எல்லாம் நிர்வகிப்பது எங்கள் வேலையா எனப் புலம்பி வருகின்றனர்.
சுற்றறிக்கை
இது குறித்து அனைத்து வங்கிகளுக்கும், காப்பீடு நிறுவனங்களுக்கும் மத்திய நிதி அமைச்சகம் கடந்த மாதம் இறுதியில் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. அதில் கூறப்பட்டுள்ளதாவது-
அனைத்து அரசு வங்கிகள், அரசு காப்பீடு நிறுவனங்கள், நிறுவனங்கள் தங்கள் பகுதிக்கு அருகே, அல்லது அந்த பகுதிகளில் எங்கு வசதியாக இருக்கிறதோ அங்கு புதிதாக கழிவறைகளை கட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
அந்த கழிவறைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்பதை வெளிப்பணி ஒப்படைப்பு நிறுவனங்கள் மூலம் கண்காணிக்க வேண்டும். இதை கார்பரேட் சமூக பொறுப்பு நிதியை பயன்படுத்திக்கொள்ளளாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
காலாண்டு அறிக்கை
அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு காலாண்டுக்கும் நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவை துறையில் வங்கிக்கடன் கொடுத்த அளவு, வாராக்கடன்களை வசூலித்த வீதம், தனியார் நிறுவனங்களுக்கு கடன் கொடுத்த வீதம் உள்ளிட்ட விவரங்களை ஒப்படைப்பது வழக்கமாகும்.
இனிமேல், காலாண்டுக்கு ஒருமுறை புதிதாக கட்டிய கழிவறைகள் எண்ணிக்கை, அதை எப்படி பராமரிக்கிறீர்கள் என்பது குறித்த அறிக்கையையும் சேர்த்து தாக்கல் செய்யவும் வங்கிகளை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு பிரசாரம்
மேலும், ஏ.டி.எம். மையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு சுத்தத்தையும், சுகாதாரத்தையும் கற்பிக்கும் வகையில் விழிப்புணர்வு செய்ய வேண்டும், அல்லது ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து வரும் ‘பில்’களில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு ஊட்ட வேண்டும்.
கடன் கேட்டால்
வங்கிகளில் கடன் கேட்கும் வாடிக்ைகயாளர்களிடமும் அவர்களின் இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு தூய்மை குறித்து விழிப்புணர்வு ஊட்ட வேண்டும் என வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், வங்கிகள் தங்கள் கிளைகளில் இருக்கும் கழிவறைகளை, வாடிக்கையாளர்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பாக்ஸ் மேட்டர்...
அதிகாரிகள் புலம்பல்
இது குறித்து முன்னணி அரசு வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ பெரும்பாலும் வங்கிகளில்கழிவறை என்பது பணம் வழங்கும் காசாளர் அறைக்கு இருப்பதால், பாதுகாப்பு காரணம் கருதி வாடிக்கையாளர்களை கழிவறையை பயன்படுத்த அனுமதிப்பதில்லை. இனிமேல், கழிவறையை வங்கிக்கு வெளியே கட்டுமானம் செய்ய கேட்டுக்கொள்வோம்.
அரசு வங்கிகளுக்கு நாடுமுழுவதும் 90 ஆயிரம் கிளைகள் இருக்கின்றன. ஒரு கழிவறை கட்ட 50 ஆயிரம் ரூபாய் செலவாகும். இது பெருநகரம், நகர் புறப்பகுதிகளில் இதைக் காட்டிலும் கூடுதலாக செலவாகும். அதற்கான நிலத்தையும் நாங்கள் கையகப்படுத்த ேவண்டும். வங்கி நடவடிக்கையோடு கழிவறை கட்டுவதும், பராமரிப்பதும் பணியும் செய்ய வேண்டுமா?. இதெல்லாம் வங்கி நடவடிக்கையில் குறிப்பிட்டவில்லையே’’ என்று புலம்பினார்.