இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1549 ஆக இருக்கிறது.

இந்தியாவில் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், இந்தியர்கள் மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தற்போது இந்தியாவில் 60-வயதுக்கும் மேற்பட்டோர் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு மட்டுமே மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மூன்றாவது டோஸ் தடுப்பூசி அரசு மையங்களில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் கட்டணத்திற்கும் போடப்பட்டு வருகிறது. 

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இலவசமாக வழங்குவது பற்றி அரசு ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து மத்திய அரசின் மருத்துவத்துறை செய்தி தொடர்பாளர் சார்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் வழங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

ஆசியா மற்றும் ஐரோப்பியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதை அடுத்து, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்த மத்திய அரசு கடந்த வாரம் வலியுறுத்தியது. சீனா மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1549 ஆக இருக்கிறது. மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக பதிவாகி உள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் டெல்டா வேரியண்ட் கோரத் தாண்டவம் ஆடியது. இந்த பாதிப்பு காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மருத்துவ துறை மிகவும் சிரமித்திற்கு ஆளானது.

மேலும் இந்த பாதிப்பில் உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. கொரோனா பெருந்தொற்று துவங்கியது முதல் இதுவரை நாடு முழுக்க கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4.3 கோடியாக இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 15 ஆயிரத்து 510 ஆக பதிவாகி உள்ளது. 

நாடு முழுக்க 140 கோடி மக்களுக்காக இதுவரை 180 கோடி பேருக்கு தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவற்றில், 2 கோடி தடுப்பூசிகள் பூஸ்டர் டோஸ் ஆகும்.