அறிவியல் தொழில்நுட்பம் நாடு தன்னிறைவு பெற உதவ வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு
நாடு தன்னிறைவு பெறுவதற்கு உதவும் வகையில் அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றம் இருக்கும் வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
நாக்பூர் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறும் 108வது இந்திய அறிவியல் மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டைத் தொடங்கிவைத்து, 'பெண்கள் முன்னேற்றத்துடன் கூடிய நீடித்த வளர்ச்சி' என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார்.
முனைவர் பட்ட ஆய்வுகள் அடிப்படையிலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிப்பதிலும் இந்தியா உலகின் டாப் 3 நாட்களில் ஒன்றாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் தெரிவித்தார்.
புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் நாடுகளின் பட்டியலில் 2015 வரை 81வது இடத்தில் இருந்த இந்தியா இப்போது 40வது இடத்தை எட்டிப்பிடித்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.
பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு ரூபாய் நோட்டு புழக்கம் இருமடங்கு அதிகரிப்பு
நாட்டின் நீடித்த வளர்ச்சி பெண்கள் முன்னேற்றத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது என்று கூறிய அவர், நாட்டின் தேவைகளை ஒட்டியே அறிவியல் முன்னேற்றமும் அமையவேண்டும் என்றார். அறிவியல் துறையில் வேகமாக வளர்ந்துவரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
அறிவியல் தொழில்நுட்பம் இந்தியா தன்னிறைவு பெற உதவவேண்டும் என்று வலியுறுத்திய அவர், அறிவியல் ஆய்வுகள் ஆய்வுக்கூடங்களுக்குள் நின்றுவிடக்கூடாது என்றும் குறிப்பிட்டார்.
நமது நாட்டு இளைஞர்களுக்கு அறிவியலின் மூலம் உலக அளவில் தாக்கம் செலுத்த முடியும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது என்ற அவர் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா எய்தவுள்ள நிலைக்கு அறிவியல் துறை முக்கியமான பங்களிப்பை அளிக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.