Omicron BF.7:இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு; கடந்த 24 மணி நேரத்தில் 4 பேருக்கு ஒமிக்ரான் BF7 தொற்று!!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 145 பேருக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும், இவர்களில் நான்கு பேருக்கு புதிய திரிபு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது என்று இந்திய மருத்துவக் கழகம் தெரிவித்துள்ளது.
கொரோனா திரிபு வைரஸான BF 7 சீனா, அமெரிக்கா, தென்கொரியா ஆகிய நாடுகளில் பெரிய அளவில் பரவி வருகிறது. சீனாவில் இந்த வைரஸ் தொற்றுக்கு பெரிய அளவில் மனித உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவிலும் கட்டுப்பாடுகளை கொண்டு வருவதற்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இத தொடர்ச்சியாக நேற்று பிரதமர் மோடி மத்திய அமைச்சர்கள், துறை சார்ந்த செயலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். தமிழ்நாட்டிலும் முதல்வர் முக ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகார்களுக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தார். மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும், மருத்துவ கட்டமைப்புகள் தயார் நிலையில் இருக்க வேண்டும், சுகாதார ஊழியர்கள் பணியில் போதிய அளவில் இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து இந்திய மருத்துவக் கழகம் வெளியிட்டு இருக்கும் செய்தியில், ''கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, பிரான்ஸ், பிரேசில் ஆகிய நாடுகளில் 5.37 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் மருத்துவ வசதிகள் பெரிய அளவில் கிடைத்து வருகிறது. அது தனியார் மருத்துவமனையாக இருக்கட்டும், அரசு மருத்துவமனையாக இருக்கட்டும். இந்த மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் கிடைத்து வருகிறது. கடந்த காலங்களைப் போலவே வரும் நாட்களிலும் நிலைமையை சமாளிக்கும் திறன் இந்தியாவிடம் இருக்கிறது.
கடந்த 2019ஆம் ஆண்டில் மத்திய அரசு வெளியிட்டது போன்று தற்போதும் மத்திய கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து, எளிதில் அவசரகால மருந்துகள், ஆக்சிஜன், ஆம்புலன்ஸ் கிடைப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.