கொரோனா 2ம் அலையை விரைவில் கட்டுப்படுத்தணும்..! வெளிநாட்டு தடுப்பூசிகளை பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல்
இந்தியாவில் கொரோனா பரவல் அதீதமாக இருக்கும் நிலையில், வெளிநாட்டு தடுப்பூசிகளை பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக உள்ளது. தினமும் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பரவிவருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் 2ம் இடத்தில் இந்தியா உள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றை தடுக்க, உள்நாட்டு தடுப்பூசிகளான கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூச்களும் தான் போடப்பட்டுவருகிறது. ஆனால் நிலைமை மிக மோசமாகியிருப்பதால், வெளிநாட்டு தடுப்பூசிகளை பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனா நோய் பரவலை விரைவில் கட்டுப்படுத்த, வெளிநாட்டு தடுப்பூசிகளை பயன்படுத்தலாம் என்ற தேசிய நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு அவசர கால ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தியாவில் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி பெற, தடுப்பூசியை உள்நாட்டில் ஆய்வு செய்திருக்க வேண்டும். ஆனால் தற்போதைய நெருக்கடியான நிலையை சமாளிக்க, அந்த விதியிலிருந்து வெளிநாட்டில் பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வெளிநாட்டு தடுப்பூசிகள், இந்தியாவில் அவரசகால அனுமதி வாங்க இந்தியாவில் ஆய்வு மேற்கொள்ள தேவையில்லை.
உலக சுகாதார மையத்தால் அங்கிகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. மேலும், வெளிநாட்டு தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளும் முதல் 100 நபர்களை 7 நாள்கள் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.