உலகை முடக்கிய கொரோனா மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் பாதிப்புகள் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். 'ஒமைக்ரான்' வகை கொரோனா வீரியமற்றது என்றும், 97% பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாகவும் தகவல்
COVID-19 India 2025: Active Cases Pass 7K Mark, 6 Fatalities : கொரோனா பாதிப்பால் உலகமே 3 ஆண்டுகள் முடங்கியது. கொத்து கொத்தாக உயிரிழப்புகள் ஏற்பட்டது. கோடிக்கணக்கான மக்கள் வேலைகளை இழந்து பரிதவித்தனர். இதனையடுத்து கொரோனா தடுப்பூசியின் காரணமாக மீண்டும் உலகமே இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியது. மீண்டும் இயல்பான பணிகளை மக்கள் செய்ய தொடங்கிய நிலையில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஒரு சில நாடுகளில் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது.
மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு
வெளிநாடுகளில் பரவி வந்த கொரோனா வைரஸ் இந்தியாவிலும் நுழைந்துள்ளது. இதனால் மீண்டும் லாக்டவுன் வருமா என மக்கள் அச்சமடையும் நிலை உருவாகியுள்ளது. டில்லி, மஹாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் தினமும் ஏராளமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன் தினம் வரை இந்தியாவில் 6815 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 324 பேர் புதிய கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 306 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 783 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனா பாதிப்பு 7ஆயிரத்தை கடந்துள்ளது.
தமிழகத்தில் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு
அதே நேரம் கொரோனா பாதிப்பிற்கு அச்சமடைய தேவையில்லையென தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பரவி வரும் 'ஒமைக்ரான்' வகை கொரோனா பாதிப்பு வீரியமற்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் இருமல், சளி மற்றும் காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டு, மூன்று நாட்களில் குணமடைந்து விடுவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் எதிர்ப்பு சக்தி சோதனை மேற்கொண்டதில் 97 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் ஒமைக்ரான் போன்ற வீரியமற்ற கொரோனா முதியோர்கள்களை பெரியளவில் பாதிக்காது என தெரிவித்துள்ளனர். இருந்தபோதும் மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ளும் வகையில் முக கவசம் அணிய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.


