இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாடு தீர்க்கமானதாக லட்சியமானதாக செயல் சார்ந்து இருக்கும்: பிரதமர் மோடி பதிவு!!
இந்தியா ஜி20 தலைமையை ஏற்று இருப்பது 'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்ற கருத்தால் ஈர்க்கப்பட்டு, தீர்க்கமானதாக, லட்சியமானதாக, செயல் சார்ந்து இருக்கும் என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். இன்று முதல் ஜி20 உச்சி மாநாட்டுக்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கிறது.
இதை முன்னிட்டு பிரதமர் மோடி டுவிட்டரில் தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார். அதில், ''ஜி20 உச்சி மாநாட்டை தலைமை பொறுப்பு ஏற்று நடத்திய முந்தைய 17 தலைமைகள் குறிப்பிடத்தக்க முடிவுகளை அளித்தன. மைக்ரோ பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்தல், சர்வதேச வரிவிதிப்பை எளிதாக்கியது, நாடுகள் மீதான கடன் சுமையை நீக்குதல் போன்றவற்றுக்கு தீர்வு கண்டன. இந்த சாதனைகளிலிருந்து மேலும் பயணித்து புதிய சாதனைகளை எங்களால் படைக்க முடியும்.
இருப்பினும், இந்த முக்கியமான பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டதால், ''ஜி20 இன்னும் வெற்றியுடன் பயணிக்க முடியுமா? ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் பயனளிக்கும் வகையில், அடிப்படை மனநிலை மாற்றத்தை நாம் ஊக்குவிக்க முடியுமா?'' என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். நம்மால் முடியும் என்று நம்புகிறேன்.
நமது சூழ்நிலைகளால் நமது எண்ணங்கள், மனநிலை மாற்றப்படுகின்றன. வரலாறு முழுவதும், மனித இனம் பற்றாக்குறையில் வாழ்ந்தது. வரையறுக்கப்பட்ட வளங்களுக்காக நாம் போராடினோம். மற்றவர்களுக்கு இந்த வளங்கள் மறுக்கப்பட்டு வந்தன. கருத்துக்கள், சித்தாந்தங்கள் மற்றும் அடையாளங்களுக்கிடையில் மோதல் மற்றும் போட்டி வழக்கமாகிவிட்டது.
துரதிர்ஷ்டவசமாக, இன்றும் நாம் அதே மனநிலையில் சிக்கிக் கொண்டிருக்கிறோம். நிலப்பரப்பு அல்லது வளங்களுக்காக நாடுகள் சண்டையிடுவதை பார்க்கிறோம். அத்தியாவசியப் பொருட்களும் இங்கு ஆயுதமாக்கப்படுவதை பார்க்கிறோம். தடுப்பூசிகள் ஒரு சிலரால் பதுக்கி வைக்கப்படுவதை காண்கிறோம்,
மோதலும், பேராசையும் மனித இயல்பு என்று சிலர் வாதிடலாம். ஆனால், நான் அதற்கு உடன்படவில்லை. மனிதர்கள் இயல்பாகவே சுயநலவாதிகளாக இருந்தால், நம் அனைவரின் ஒருமைப்பாட்டை ஆதரிக்கும் பல ஆன்மீக மரபுகளின் நீடித்த உறவை என்னவென்று கூறுவது? விளக்க முடியுமா?
இந்தியாவில் இத்தகைய பாரம்பரியம் பிரபலமானது. அனைத்து உயிரினங்களும், உயிரற்ற பொருட்களும் கூட, பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகிய ஐந்து அடிப்படை கூறுகளால் ஆனது. இந்த கூறுகளுக்கு இடையே உள்ள இணக்கம், வேறுபாடுகள் ஆகியவை நமது உடல், சமூக மற்றும் சுற்றுச்சூழல் நல்வாழ்வுக்கு அவசியம். இன்று, நாம் உயிருடன் வாழ்வதற்காக போராட வேண்டிய அவசியமில்லை. நமது சகாப்தம் போர் நிறைந்ததாக இருக்க வேண்டியதில்லை.
இன்று நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களான பருவநிலை மாற்றம், பயங்கரவாதம் மற்றும் தொற்றுநோய்கள் ஆகியவற்றை ஒருவருக்கொருவர் சண்டையிடுவதன் மூலம் தீர்க்க முடியாது. ஆனால் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் மட்டுமே தீர்க்க முடியும்.
அதிர்ஷ்டவசமாக, இன்றைய தொழில்நுட்பம் மனிதகுலத்தின் பிரச்சினைகளை தீர்க்கும் வழிமுறைகளையும் வழங்குகிறது. நாம் இன்று அன்றாட பயனபடுத்தும் மெய்நிகர் தொழில்நுட்பங்கள் அவற்றை நிரூபித்துக் கொண்டு இருக்கின்றன.
உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கை கொண்டு இருக்கும் இந்தியா மொழிகள், மதங்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகளின் பன்முகத்தன்மையுடன் விளங்குகிறது. ஒன்றிணைந்து எடுக்கும் கூட்டு முடிவுகள் மூலம் இந்தியா ஜனநாயக மரபணு நிரூபிக்கப்படுகிறது. ஜனநாயகத்தின் தாயாக இருக்கும் இந்தியா, அனைவரின் குரல்களையும் இணைத்து முன்னோக்கி செல்கிறது.
இன்று, இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக உள்ளது. மக்களை மையமாகக் கொண்ட நமது நிர்வாக மாதிரியானது, நமது திறன் வாய்ந்த இளைஞர்களின் படைப்புகளை வெளி கொண்டு வரும் அதே வேளையில், நாட்டு மக்களின் நலனையும் கவனித்துக் கொள்கிறது. சமூகப் பாதுகாப்பு, நிதி சேவை, மற்றும் மின்னணு பண பரிமாற்றம் ஆகிய துறைகளில் புரட்சிகரமான முன்னேற்றத்தை அளித்து வருகிறோம். இதன் மூலம், இந்தியாவின் அனுபவங்களைக் கொண்டு உலகளாவிய தீர்வுகளுக்கான தொழில்நுட்ப அறிவை வழங்க முடியும்.
நமது ஜி20 தலைமை காலத்தில், இந்தியாவின் அனுபவங்கள், கல்வி மற்றும் முன் மாதிரிகளை வளரும் நாடுகளுக்கும் சாத்தியமாக எடுத்துச் செல்வோம். நமது ஜி20 முன்னுரிமைகள், ஜி20 கூட்டு நாடுகளுடன் மட்டுமின்றி உலகின் தெற்கில் உள்ள சக மக்களுடனும் கலந்தாலோசித்து வடிவமைக்கப்படும். அவர்களின் குரல் பெரும்பாலும் கேட்கப்படாமல் இருந்து வருகிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.