புதிய இந்தியாவை உருவாக்க அனைவரும் இணைந்து பாடுபடவேண்டும்…குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை…
நாட்டு விடுதலைக்காக உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம் என்றும் புதிய இந்தியாவை உருவாக்குவதற்காக நாம் இணைந்து செயல்படுவோம் என்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது முதல் சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 71 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றினார்.
அதில் நாட்டு விடுதலைக்காக உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம் என்றும் புதிய இந்தியாவை உருவாக்குவதற்காக நாம் இணைந்து செயல்படுவோம் என்றும் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.
2022-ல், நமது நாடு சுதந்திரம் அடைந்து 75-வது ஆண்டு நிறைவு பெறுகிறது , அதற்குள் இந்தியாவில் இருந்து வறுமையை முற்றிலுமாக ஒழிக்க அனைவரும் பாடுபடவேண்டும் என்றும் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.
அரசு கொள்கைகளின் பயன்கள் சமுதாயத்தின் அனைத்து பிரிவினருக்கும் சென்றடைய, அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையில் மக்கள் ஆதரவு அளித்துள்ளனர் என்றும், ஜி.எஸ்.டி. சட்டத்தை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றது தனக்கும் மகிழ்ச்சியே என்று அவர் தெரிவித்துள்ளார்.
தேவைப்படும் நேரத்தில் நாம் அண்டை வீட்டாருக்கு உதவ வேண்டும். அரசாங்கமும் மக்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
பெண் குழந்தைகளுக்கு எதிராக பாகுபாடு காட்டாமல், சிறந்த கல்வி பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் ராம்நாத் கோவிந்த் கூறினார்.