"இதுவரை ரூ. 3,590 கோடி பறிமுதல்" - வருமான வரித்துறை தகவல்!
பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது முதல், நேற்று முன்தினம் வரை, கணக்கில் காட்டப்படாத 3 ஆயிரத்து 590 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 3 ஆயிரத்து 589 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
மத்திய அரசின் ரூபாய் நோட்டு நடவடிக்கையை அடுத்து, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வரும் சோதனைகளில் கோடிக்கணக்கில் கணக்கில் காட்டப்படாத புதிய மற்றும் பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கடந்த 21-ம் தேதி வரை, கணக்கில் காட்டப்படாத 3 ஆயிரத்து 590 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 3 ஆயிரத்து 589 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை அறிவித்துள்ளது. 93 கோடி ரூபாய் அளவுக்கு புதிய நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை சோதனையை அடுத்து, 400 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வருமான வரித்துறை குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லி விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, வெளிநாட்டு பயணி ஒருவரிடம் 53 லட்சத்து 78 ஆயிரம் மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகள் மற்றும் 4 லட்சத்து 29 ஆயிரம் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனிடையே, கர்நாடக மாநிலம் ஹுப்ளியில், 29 லட்சத்து 98 ஆயிரம் மதிப்புள்ள புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.