இதுவரை ரூ. 4 ஆயிரத்து 172 கோடி பறிமுதல்….வருமானவரித்துறை சோதனையில் அதிரடி
பிரதமர் மோடி ரூ. 500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவிக்கப்பட்ட நவம்பர் 8-ந் தேதியில் இருந்து, நாடுமுழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், கணக்கில் வராத ரூ. 4,172 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புதிய ரூபாய் நோட்டுகள் ரூ. 105 இதில் அடங்கும் என வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் கருப்புபணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் வகையில் பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8-ந்தேதி ரூ. 500 , ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தார். அதைத் தொடர்ந்து 9-ந்தேதி முதல் வருமான வரித்துறையினர், அமலாக்கப்பிரிவினர் நாடுமுழுவதும் அதிரடிச் சோதனை நடத்தி, கருப்புபணம், தங்க நகைகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இது குறித்து வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறுகையில், “ கடந்த 50 நாட்களில் நாடுமுழுவதும் 983 சோதனைகள், விசாரணைகள், ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை 5 ஆயிரத்து 27 பேருக்கு வரி ஏய்ப்பு மற்றும் ஹவாலா பணம் வைத்திருந்தது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த 50 நாட்களில் அதாவது இம்மாதம் 28-ந்தேதிவரை கணக்கில் வராத வருவாய் ரூ.4 ஆயிரத்து 172 கோடிக்கும் அதிகமான வருவாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் நவம்பர் மாதத்தில் மட்டும் ரூ.549 கோடி மதிப்பிலான நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
டிசம்பரில் இதேபோல ரூ.458 கோடி மதிப்பிலான நகை, பணம் கைப்பற்றப்பட்டது. இதில் ரூ.105 கோடிக்கு புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளாகும்.
இதுவரை சட்டவிரோர பணப்பரிமாற்றம், சொத்துக்குவிப்பு, ஊழல் ஆகிய தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு துறைக்கு வருமான வரித்துறை 477 வழக்குகளை பரிந்துரை செய்துள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன. .
