வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடத்த அகில இந்திய காங்கிரஸ் தலைமை அழைப்பு விடுத்துள்ளது

காங்கிரஸ் கட்சியின் அனைத்து வங்கிக் கணக்குகளும் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 - 2019 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குகள் 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததாகக் கூறி காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி, மகளிரணி, மாணவரணி உள்ளிட்ட அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. அதோடு 45 நாட்கள் தாமதமாக வருமான வரி தாக்கல் செய்யப்பட்டதற்காக ரூ.210 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதனை எதிர்த்து வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் காங்கிரஸ் கட்சி மனுத்தாக்கல் செய்தது. ஆனால், அந்த மனுவை தீர்பாயம் தள்ளுபடி செய்துள்ளது. தேர்தல் நேரத்தில் தங்களது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, ரூ.1823 கோடி வரி செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 4 நிதி ஆண்டுகளில் ரூ.1823 கோடிக்கு காங்கிரஸ் கட்சி வரி செலுத்தவில்லை எனக்கூறி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2017-18 முதல் 2020-21 வரை முறையாக வரி செலுத்தாததால் அபராதத்தையும் சேர்த்து செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நமோ ஆப் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளுடன் உரையாடும் பிரதமர் மோடி!

இந்த நிலையில், வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதற்கு எதிராக நாடு முழுவதும் நாளை போராட்டம் நடத்த அகில இந்திய காங்கிரஸ் தலைமை அழைப்பு விடுத்துள்ளது. ரூ.1823 கோடி ரூபாய் வருமான வரியை செலுத்த வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதற்கு எதிராகவும், காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.135 கோடி ரூபாயை வலுக்கட்டாயமாக வருமான வரி துறை பிடித்தம் செய்ததற்கு எதிராகவும், காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்கியதற்கு எதிராகவும் நாளை போராட்டம் நடத்த அகில இந்திய காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு மாநில காங்கிரஸ் தலைமையும், அந்தந்த மாநில, மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்த வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.