ஏசி வகுப்பில் பயணம் செய்பவர்களுக்கு புதிய போர்வை… ரயில்வே துறை அறிவிப்பு…
ரயிலில் ஏசி வகுப்பில் பயணம் செய்யும் பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வைககள் சலவை செய்யப்படுவதில்லை என எழுந்த புகாரையடுத்து, தற்போது புதிய போர்வைகள் வழங்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரெயிலில் ஏ.சி. வகுப்பில் பயணம் செய்கிற பயணிகளுக்கு ஒரு செட் விரிப்புகள், துண்டு, தலையணை, போர்வை வழங்கப்படுகிறது. ஆனால் இந்த போர்வைகள் 6 மாதத்துக்கு ஒரு முறை கூட சலவை செய்யப்படுவது இல்லை என்று தலைமை கணக்கு தணிக்கையர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதையடுத்து பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், பயணிகளுக்கு பழைய போர்வைக்கு பதிலாக புதிய போர்வை வழங்க ரெயில்வே நிர்வாகம் அதிரடியாக முடிவு செய்துள்ளது.
இந்த போர்வைகள் எடை குறைவானதாக, பயன்படுத்துவதற்கும், சலவை செய்வதற்கும் எளிதானதாக இருக்கும் என்று ரயில்பே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இத்தகைய போர்வையை வடிவமைத்து தருமாறு ‘நிப்ட்’ என்னும் தேசிய ஆடைகள் வடிவமைப்பு கல்லூரியிடம் ரெயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது என்றும் சோதனை ரீதியில், மெல்லிய போர்வைகள் மத்திய மண்டல ரெயில்களில் தற்போது வழங்கப்பட்டு வருவதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு பயணத்தின்போதும், சலவை செய்யப்பட்ட போர்வைகளை பயணிகளுக்கு வழங்குவதுதான் ரெயில்வேயின் இலக்கு என்றும் , புதிதாக வடிவமைத்து தருகிற மெல்லிய போர்வைகளை ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் சலவை செய்து பிற பயணிகளுக்கு வழங்க ரெயில்வே திட்டமிட்டு வருகிறது என்றும் அதிகாரிகள் கூறினர்.