ஒருவரே 2 தொகுதியில் போட்டியிட தடை - உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்
நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் ஒரே நபர் 2 தொகுதிகளில் போட்டி போடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி பொதுநல வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் டெல்லி மாநில செய்தி தொடர்பாளர் அஸ்வினி குமார் உபாத்யாய் இந்த பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது-
ஒரு நபர் ஒரே தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட வகை செய்யும் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 33 (7)-ஐ நீக்கவேண்டும்.
ஒரு நபர் 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்றால் அவர் , அவற்றில் ஒரு தொகுதியில் இருந்து விலகவேண்டியுள்ளது. இதனால் அரசுக்கு வீண் செலவும், உழைப்பு வீணடிப்பும் ஏற்படுகிறது.வெற்றிபெற்ற ஒரு வேட்பாளர் ராஜினாமா செய்வது அவருக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு அநீதி அளிப்பதாகவும் உள்ளது .
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு வெற்றி பெற்றுவிட்டு ஒரு தொகுதியை ராஜினாமா செய்யும் வேட்பாளர் அந்த தொகுதியில் தேர்தல் செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் ஆலோசனை கூறியுள்ளது குறித்து பரிசீலிக்கவும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தேர்தல்களில் சுயேச்சை வேட்பாளர்கள் அதிக அளவில் போட்டியிடுவதை தவிர்க்கும் நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் செய்திட வேண்டும் என்றும் அந்த பொதுநல மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது வாக்குகள் பிரிவதற்கு காரணமாகிவிடுகிறது என அதில் விளக்கம் கூறப்பட்டுள்ளது.