681 பேர் பலி..! இந்தியாவில் 21 ஆயிரத்தை கடந்து அசுர வேகம் எடுக்கிறது கொரோனா பாதிப்பு..!
கொரோனா பாதிப்பு இந்தியாவில் 21 ஆயிரத்தைக் கடந்திருப்பதால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
உலக அளவில் பெரும் நாசங்களை விளைவித்து வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் அசுர வேகம் எடுத்து இருக்கிறது. தினமும் 500 நபர்களுக்கு மிகாமல் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு வரும் நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 21,393 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது அறிவித்திருக்கிறது. அவர்கள் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் கொரோனா நோய்க்கு தாக்கு பிடிக்க முடியாமல் 681 பேர் பலியாகி இருக்கின்றனர்.
ஆறுதல் தரும் செய்தியாக கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நாடுமுழுவதும் கொரோனாவில் இருந்து 4,258 மக்கள் பூரண நலம் பெற்று தங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு இந்தியாவில் 21 ஆயிரத்தைக் கடந்திருப்பதால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. எனினும் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனா பாதிப்பு இந்தியாவில் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளதாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நடவடிக்கையால் நாட்டில் சமூக பரவல் ஏற்படவில்லை எனவும் வல்லுநர்கள் கருத்துகள் தெரிவிக்கின்றனர்.
துபாயில் உயிரிழந்த தமிழர்..! விடாமல் முயன்று உடலை தமிழகம் வரவழைத்த வைகோ...!
இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஸ்டிராவில் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அங்கு இதுவரை 5,652 பேர் பாதிக்கப்பட்டு 269 பேர் உயிரிழந்துள்ளனர். சிகிச்சையில் இருப்பவர்களில் 789 பேர் நலமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர். அதற்கடுத்தபடியாக டெல்லியில் 2,248 பேரும், குஜராத்தில் 2,407 பேரும் ராஜஸ்தானில் 1,890 பேரும் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் தமிழகம் இந்திய அளவில் 5ம் இடம் வகிக்கிறது. நேற்று ஒரே நாளில் 33 பேருக்கு தொற்று உறுதியாகி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,629 ஆக உயர்ந்துள்ளது. பிற மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.