டெல்லியில் கடும் பனிமூட்டம் ஏற்பட்டுள்ளதால் இந்திய வானிலை மையம் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது

வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான குளிர் நிலவுகிறது. கடுமையான பனிமூட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வெப்பநிலை மைனஸில் பதிவாகியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தலைநகர் டெல்லியை பொறுத்தவரை எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு மூடுபனி நிலவுவதால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். வெப்பநிலை 7 டிகிரிக்கு குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லியில் இந்த பனியானது அடுத்த இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, டெல்லியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் (Orange Alert) விடுக்கப்பட்டுள்ளது. குளிர் காலத்துக்கு விடுக்கப்படும் ஆரஞ்சு எச்சரிக்கை என்பது 50 மீட்டர் குறைவான தொலைவில் உள்ள பொருட்களை மட்டுமே பனியில் பார்க்க முடியும் என்பதாகும்.

கேரளாவில் டெட்ரா பாக்கெட்டில் மதுபான விற்பனை அறிமுகம்!

அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய இந்தியாவின் சில பகுதிகளில் அடர்த்தியான முதல் மிக அடர்த்தியான மூடுபனி தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முன்னதாக, அடர் பனிமூட்டம் காரணமாக டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 30 விமானங்களுக்கான வருகை மற்றும் புறப்பாடு தாமதமானது. காலை 6 மணி முதல் 9 மணி வரை டெல்லி விமான நிலையத்திற்கு வந்த விமானங்கள் திருப்பி விடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏழு விமானங்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கும், ஒரு விமானம் அகமதாபாத்துக்கும் திருப்பி விடப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.