Jawad cyclone : உருவானது ஜாவத் புயல்… அப்டேட் கொடுத்த இந்திய வானிலை மையம்!!
மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஜாவத் புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஜாவத் புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருந்தது. அது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி இன்று, புயலாக வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டிருந்தது. இந்த புயலுக்கு ஜவாத் என்று பெயரிடப்பட்டது. இதன் காரணமாக அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு மற்றும் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
தெற்கு அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிய நிலையில், இது நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று பின் புயலாக மாறும் எனவும் கூறப்பட்டது. அதன்படி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது இன்று அதிகாலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது தற்போது மேலும் தீவிரமடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் ஜாவத் புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஜாவத் புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த புயல் நாளை வடக்கு ஆந்திரா- தெற்கு ஒடிசா அருகே கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளதால் ஒடிசா மாநிலத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியால், தமிழகத்தில் உள்ள எண்ணூர், கடலூர், நாகை, தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து, பாம்பன், புதுச்சேரி உள்ளிட்ட துறைமுகங்களிலும் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் ஏறனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே, ஒடிசா மாநில அரசு, முன்னெச்சரிக்கையாக, தெற்கு கடற்கரை முழுவதும் 266 மீட்புக் குழுக்களை நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளது. இதில் தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில தீயணைப்பு சேவைகள் மற்றும் ஒடிசா பேரிடர் விரைவு நடவடிக்கைப் படை ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.