‘ஆதார் இல்லாவிட்டால், ஒருவர் இறந்துவிட்டார் என்று அர்த்தமா?'.....அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
ஒருவரிடம் ஆதார் இல்லை என்றால் அவரை இறந்தவராக அரசு கருதுகிறதா? என, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
வீடு இல்லாத ஏழைகள்
ஆதார் தொடர்பான வழக்கில் இந்த கேள்வியை உச்ச நீதிமன்றம் எழுப்பவில்லை. வட மாநிலங்களில் கடுமையான குளிரினால் பாதிக்கப்பட்டுள்ள வீடு இல்லாத மக்களை இரவு நேர தங்கும் இடங்களில் அனுமதிப்பது தொடர்பான வழக்கில்தான், ‘‘வீடு இல்லாத ஒருவரிடம் ஆதார் இல்லை என்றால் அவர் உயிரோடு இல்லை என்று அர்த்தமா? என்ற இந்த கேள்வியை நீதிபதிகள் கேட்டு உள்ளனர்.
அதற்குப் பதில் அளித்த உத்தரப்பிரதேச மாநில அரசு சார்பில் ஆஜரான வக்கீல் ஒருவர், ஆதார் இல்லை என்றால் வாக்காளர் அடையாள அட்டை போன்ற மற்ற அடையாள அட்டைகளையும் அவர் பயன்படுத்தலாம் என பதில் அளித்தார்.
நீதிபதி பதிலடி
அதற்கு உடனடியாக பதிலடி கொடுத்த நீதிபதி, ‘‘வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கு முகவரி ஆதாரம் கொடுக்க ேவண்டும். வீடு இல்லாதவர் எந்த முகவரியைக் கொடுப்பார்?’’ என்று திருப்பிக்கேட்டார்.
நாட்டில் எத்தனை பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டு உள்ளது? என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு பதில் அளித்த மனுதாரர் வக்கீலான பிரசாந்த் பூஷன், நாட்டில் உள்ள 90 கோடி மக்களிடம் உள்ள ஆதார் அட்டைகளை வங்கிகள், செல்போன் மற்றும் அரசின் நலத்திட்ட சேவைகளுடன் இணைக்க வேண்டும் என்று அரசு அறிவித்து உள்ளது என்று கூறினார்.
ரூ.500க்கு ஆதார் விவரங்கள்
ஆதார் கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வருகிற 17-ந்தேதி முதல், 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு தொடங்குகிறது.
இதற்கிடையில், ஆதார் விவரங்கள் விற்பனை ெசய்யப்படுவதாகவும் ,ரூ.500 கொடுத்தால் 100 கோடி மக்களின் ஆதார் விவரங்களை பெற முடியும் என்றும், டிரிபியூன் பத்திரிகையில் ஆதாரத்துடன் செய்தி வெளியாகி இருந்தது.
இந்த நிலையில், ஆதார் பற்றி உச்ச நீதிமன்றம் மேற்கண்ட கேள்வியை எழுப்பி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.