நிதி மோசடியில் ICICI வங்கி முதலிடம்… நடவடிக்கை எடுக்க ரிசர்வ் வங்கி உறுதி..
பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளின் போது ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி 1 லட்சம் அளவிலான நிதி மோசடி புகாரில் சிக்கியுள்ளதையடுத்த அவ்வங்கியின் மீது கடும் நடவடிக்கை எடுக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
கருப்புப் பணப்புழக்கம், கள்ளநோட்டு போன்றவற்றை கட்டுப்படுத்தும் வகையில், ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளின் மதிப்பை நீக்கி மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் 8 ஆம் தேதி நடவடிக்கை மேற்கொண்டது.
மேலும், ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தில் கைவசம் உள்ள அந்த நோட்டுகளை உடனடியாக வங்கிகளில் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
அதுமட்டுமின்றி, வங்கிகளில் பணம் எடுக்கவும், பணம் செலுத்தவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இதன் விளைவாக தற்போது நாடு முழுவதும் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அதிக அளவில் பணம் குவிந்துள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் மட்டும் 25 முக்கிய வங்கிகளில் 35 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பொதுமக்கள், நிறுவனங்கள் சார்பில் பணம் செலுத்தப்பட்டுள்ளது.
இதில், 40 சதவீதத்திற்கும் அதிகமான பணம் வருமான வரித்துறை கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, கடந்த ஆண்டில் வங்கிகளில் நடைபெற்ற நிதிமோசடியில் ஐ.சி.ஐ.சி.ஐ. என்ற தனியார் வங்கி முதலிடம் பிடித்திருப்பதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிகளில் மட்டும் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் 455 நிதி மோசடி சம்பவங்கள் நடைபெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்ததாக பாரத ஸ்டேட் வங்கிகளில் 429 மோசடி சம்பவங்களில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மொத்தம் 2 ஆயிரத்து 236 கோடி ரூபாய் அளவுக்கு நிதிமோசடிகள் நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.