நான் அப்பவே சொன்னேன்.. அவர் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்னு.. பெயர் சொல்லாமல் பங்கம் செய்த அம்ரீந்தர் சிங்.!
அவர் (சித்து) ஒரு நிலையான எண்ணம் உள்ள மனிதர் கிடையாது. எல்லை மாநிலமான பஞ்சாபுக்கு அவர் பொருத்தமானவராக இருக்க மாட்டார் முன்னாள் முதல்வர் அம்ரீந்தர் சிங் பெயர் குறிப்பிடாமல் சித்துவை கிண்டலடித்துள்ளார்.
பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால், மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் அம்ரீந்தர் சிங் - நவ்ஜோத் சிங் சித்து ஆகியோருக்கு ஏற்பட்ட உட்கட்சிப் பிரச்சினை காரணமாக மாநில முதல்வர் பதவியை அம்ரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். இதனையடுத்து சித்துவின் ஆதரவளரான சரண்ஜித் சிங் சன்னி புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கத் தொடங்கிஅ அம்ரீந்தர் சிங், பாஜகவில் இணையப் போவதாகவும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. இதற்கிடையே இரண்டு நாள் பயணமாக அம்ரீந்தர் சிங் டெல்லிக்கு செல்ல உள்ளார். அங்கு பாஜக தலைவர் ஜேபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சித்து விலகினார். இதனால் பஞ்சாப் காங்கிரஸில் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே முன்னாள் முதல்வர் அம்ரீந்தர் சிங் இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அதில், “நான் ஏற்கனவே சொன்னேன். அவர் ஒரு நிலையான எண்ணம் உள்ள மனிதர் கிடையாது. எல்லை மாநிலமான பஞ்சாபுக்கு அவர் பொருத்தமானவராக இருக்க மாட்டார்” என பெயர் எதையும் குறிப்பிடாமல் சித்துவை விமர்சித்துள்ளார்.