"ஒரு வடைக்காக இப்படியா செய்றது?" - ஓட்டல் முதலாளியை குத்தி கொலை செய்த வாடிக்கையாளர்
கேரள மாநிலம், கொச்சி அருகே ஒரு ஓட்டலில் பரிமாறப்பட்ட வடை சரியில்லை என்பதற்காக, முதலாளியை கத்தியால் குத்தி வாடிக்கையாளர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொச்சி மாவட்டம், விட்டிலா, மங்களப்பள்ளி நகரைச் சேர்ந்தவர் ஜான்சன். இவர் சிபின் என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வந்தார். இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரித்தீஸ்.
இந்நிலையில், நேற்று முன்தினம், ஜான்சன் ஓட்டலுக்கு ரித்திஸ் காலையில் சிற்றுண்டி சாப்பிட வந்துள்ளார். அப்போது, ரித்தீஸுக்கு பரிமாறப்பட்ட வடை சரியில்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ஜான்சனிடம் புகார் அளித்தார் ரித்திஸ். அதற்கு அவர் கண்டு கொள்ளவில்லை என தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த ரித்தீஸ் கடையில் இருந்து வௌியேறினார். இந்நிலையில், நேற்று முன்தினம் நண்பகலில், ஜான்சன் சாலையில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது மதுபோதையில் எதிரே வந்த ரித்தீஸ், ஜான்சனிடம் வம்பு இழுத்துள்ளார். காலையில் தனக்கு பரிமாறப்பட்ட வடை குறித்து ஜான்சனிடம் தகராறு செய்துள்ளார் ரித்தீஸ்.
அப்போது வாக்குவாதம் முற்றவே, தான் மறைத்து வைத்துஇருநத கத்தியால், ஜான்சனின் கழுத்தில் ரித்திஸ் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில், ரத்த வௌ்ளத்தில் ஜான்சன் மயங்கினார்.
சாலையில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் போலீசுக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் கொடுத்தனர். அப்பகுதியில் இருந்தபோலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த ஜான்சனை மீட்டு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், அவர் கொண்டு வரும் வழியில் இறந்துவிட்டதாக அவரை பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, மாராடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து ரித்தீஸை கைது செய்தனர்.
ஒரு வடைக்காக ஓட்டல் முதலாளியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.