ஆம்புலன்ஸ் வசதி இல்லை... கையில் காசும் இல்லை... கண்ணீருடன் 2 மணிநேரமாக மகளின் சடலத்தை வைத்து கதறிய தந்தை..!
ஆம்புலன்சுக்கு பணம் கொடுக்க முடியாததால் மருத்துவமனையில் இருந்து மகளின் சடலத்தை கண்ணீருடன் கையில் சுமந்து சென்ற சம்பவம் தெலங்கானாவில் அரங்கேறியுள்ளது.
ஆம்புலன்சுக்கு பணம் கொடுக்க முடியாததால் மருத்துவமனையில் இருந்து மகளின் சடலத்தை கண்ணீருடன் கையில் சுமந்து சென்ற சம்பவம் தெலங்கானாவில் அரங்கேறியுள்ளது.
தெலங்கானா மாநிலம், பொத்தப்பல்லி மாவட்டத்தில் உள்ள கூனுறு கிராமத்தை சேர்ந்தவர் சம்பத். இவரின் மகள் கோமளா(7). கடந்த 10 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். அவரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு கரீம்நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் கோமளாவிற்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, சிறுமிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி கோமளா பரிதாபமாக உயிரிழந்தார். இதில் சம்பத் கையில் பணம் இல்லாததால் சொந்த ஊருக்கு மகளின் சடலத்தை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்தித் தரும்படி மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டுள்ளார்.
ஆனால், மருத்துவமனை நிர்வாகத்தினர் ஆம்புலன்ஸ் இல்லை என கூறினர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் சுமார் 2 மணிநேரம் மருத்துவமனை முன்பு சம்பத் கண்ணீருடன் தவித்துக்கொண்டிருந்தார். யாரும் எந்த உதவியும் செய்யாததால் மகளின் சடலத்தை கையில் ஏந்தியபடி மருத்துவமனைக்கு வெளியே வந்து ஆட்டோ ஓட்டுனர்களிடம் சொந்த ஊருக்குச் செல்ல உதவும்படி கேட்டார். பலரும் நிராகரித்த நிலையில் ஒரு ஆட்டோ டிரைவர் மட்டும் ஆட்டோவில் சடலத்தை ஏற்றிக்கொண்டு சம்பத்தின் சொந்த ஊருக்கு அழைத்து சென்றார். இந்த சம்பவம் அங்கு இருந்தவர்களை கண்கலங்க வைத்தது.