புதுச்சேரியில் திமுக எம்பி அ.ராசாவைக் கண்டித்து இ.முன்னணி போராட்டம்; தமிழ்நாடு பஸ்கள் மீது தாக்குதல்!!
இந்து மதத்தை பற்றி தவறாக பேசிய திமுக எம்.பி. அ. ராசவை கண்டித்து புதுச்சேரியில் இந்து முன்னணி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. புதுச்சேரி வந்த 5 தமிழ்நாடு அரசு பேருந்துகளை மர்ம நபர்கள் கல்வீசி தக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கலவரம் நடைபெறாமல் இருப்பதற்காக யூனியன் பிரதேசம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்து மதத்தை பற்றியும், இந்து பெண்கள் பற்றியும் தவறாக பேசிய தி.மு.க., எம்.பி., அ. ராசா மீது மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அவரை கண்டித்தும் புதுச்சேரியில் இன்று ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு இந்து முன்னணியினர் அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி இன்று காலை முதல் புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
புதுச்சேரியில. உள்ள பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. அரசு பள்ளிகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. அதே போல் புதுச்சேரியில் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை, அரசு பேருந்துகள் மட்டும் போலீஸ் பதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க புதுச்சேரி முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பாஜக நிர்வாகிகள் ஐயப்பன், ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் வில்லியனூர் பகுதியில் இருந்து விழுப்புரம் சென்ற தமிழ்நாடு அரசு பேருந்து மற்றும் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி வந்த அரசு பேருந்து என மொத்தம் 5 பேருந்துகளின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் பேருந்தின் மீது கல்வீசி தாக்கியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பொதுசொத்தை சேதப்படுத்துவர்கள் மற்றும் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. மேலும் புதுச்சேரியில் இருந்து செல்லும் அரசு பேருந்துகள் அனைத்தும் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் ரோட்டில் போக்குவரத்து பாதித்துள்ளது.