Heroin Seized: படகில் வந்த போதைப்பொருட்கள்.. 400 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்..
பாகிஸ்தானிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.400 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருட்களை, பறிமுதல் செய்ததுடன் 6 பாகிஸ்தானியர்களையும் குஜராத் கடற்படைப் பாதுகாப்புப்படையினர் கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருட்கள் கடல் வழியாக இந்தியாவிற்குள் கடத்த இருப்பதாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது. மேலும் போதைப் பொருட்களை குஜராத் வழியாக இந்தியாவிற்குள் கொண்டு வரப்பட இருப்பதாக தகவல் வந்ததை அடுத்து குஜராத் கடலோர காவல் படையினரும், குஜராத் தீவிரவாதத் தடுப்பு பிரிவினரும் இன்று அதிகாலையில் அதிரடியாக சோதனையில் இறங்கினர். அப்போது, அல் ஹூசைனி என்ற பெயருடைய படகு ஒன்று குஜராத்தின் கடலோர எல்லைக்குள் நுழைந்துள்ளது.
இதையடுத்து, அந்தப் படகை சுற்றி வளைத்த கடலோர பாதுாப்பு படையினர், தீவிரவாத தடுப்புப்படையினர் அந்தபடகை ஆய்வு செய்தனர். அந்த படகில் பாகிஸ்தானைச் சேர்ந்த 6 பேர் இருந்தனர். அதில் 77 கிலோ ஹெராயின் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, படகில் இருந்த 6 பேரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படனர். அந்த ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து குஜராத் பாதுகாப்புத்துறை ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில் “குஜராத் கடலோர காவல்படை, குஜராத் தீவிரவாததடுப்புப்படை இணைந்து நடத்திய சோதனையில், அல் ஹூசைனி என்ற படகு சிக்கியது. அதில் 6 பாகிஸ்தானியர்கள் இருந்தனர். மேலும், படகின் உள்ளே மறைத்து வைக்கப்பட்டு இருந்த 77 கிலோ ஹெராயின் போதைப் பொருட்களையும் கண்டுபிடித்தனர். உடனடியாக, படகில் இருந்த ஹெராயின் பொருட்களை பறிமுதல் செய்த கடலோர காவல்படை பாகிஸ்தானைச் சேர்ந்த 6 பேரையும் கைது செய்தது. பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் பொருட்களின் மதிப்பு சுமார் ரூபாய் 400 கோடி ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் கடந்த ஏப்ரல் 15ம் தேதி பாகிஸ்தான் படகில் 33 கிலோ ஹெராயின் போதைப் பொருள் கடத்தி வரப்பட்டு, இந்திய கடற்படையினரால் பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன் சர்வேதசமதிப்பு ரூ.300 கோடி என்று கூறப்பட்டது.