சுட்டெரிக்கும் வெயிலுக்கு 130 பேர் பலி... மாலை 4 மணிவரை 144 தடை உத்தரவு...!
வெயில் தாக்கத்தால், பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் 130 பேர் பலியாகியுள்ளனர். இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில், மாலை 4 மணிவரை 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.
வெயில் தாக்கத்தால், பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் 130 பேர் பலியாகியுள்ளனர். இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில், மாலை 4 மணிவரை 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.
அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும், வரலாறு காணாத கோடை வெயில் நாடு முழுவதும் மக்களை தீயிட்டு எரிக்கிறது. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தால், சென்னை மக்கள் தவித்து வருகின்றனர்.
இதேபோல், வட மாநிலங்களிலும் வெயில் கொடுமை அதிகரித்துள்ளது. பீகாரில் கடந்த 2 நாட்களாக அதிக வெயிலால், அனல் காற்று வீசுகிறது. மக்களை வாட்டி வருகிறது. 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. கயா, பாட்னா, பகல்பூர் ஆகிய மாவடட்ங்களில் இதுவரை 130 பேர் இறந்துள்ளனர். இன்று வெயில் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என கயா மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பீகாரில் ஏற்கனவே மூளைக்காய்ச்சலுக்கு 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் வெயில் கொடுமை வேறு வாட்டி வதைக்கிறது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இன்று (ஜூன் 19) அனல் காற்று வீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.