கேரளாவிற்கு இந்தியா முழுவதும் குவியும் உதவிகள்... அரியானா அரசு ரூ.10 கோடி அறிவிப்பு!
100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெய்துள்ள மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் பாதித்த கேரளாவுக்கு நிவாரணமாக ரூ.10 கோடி வழங்குவதாக அரியானா அரசு அறிவித்துள்ளது.
100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெய்துள்ள மழையால் ஏற்பட்டுள்ள
வெள்ளம் பாதித்த கேரளாவுக்கு நிவாரணமாக ரூ.10 கோடி வழங்குவதாக அரியானா அரசு அறிவித்துள்ளது.
கடந்த 20 நாட்களாக வரலாறு காணாத கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பெரும் பேரழிவை சந்தித்திருக்கிறது கேரள மாநிலம். இதனால் மாநிலம் முழுவதும் உள்ள அணைகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி உள்ளது. இந்த மழை தொடர்ந்து நீடித்து வருவதால் கேரளாவில் நிலச்சரிவு, வீடுகள் இடிந்தது போன்ற பேரிடர்கள் பல இடங்களில் நடந்து உள்ளது.
மேலும் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தது, மின்கம்பிகள் அறுந்தது போன்ற சம்பவங்களால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. மீட்புப்பணிகள் துரித கதியில் நடந்து கொண்டிருக்க உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400-ஐ தொட்டுள்ளது.
1924 ஆம் ஆண்டுக்கு பிறகு, கேரளா எதிர்கொள்ளும் இரண்டாவது மிகப்பெரிய வெள்ள பேரிடர் இது.
கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத மோசமான வெள்ளத்தைக் கேரளா சந்தித்துள்ளது. 80 அணைகள் திறக்கப்பட்டுள்ளன. 324 பேர் பலியாகியுள்ளனர். 223139 மக்கள் 1500க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 5.91 கோடி ரூபாய் அளவுக்கு வீடுகள், தோட்டங்கள், சுமார் 1,513 ஹெக்டர் அளவிலான விளை நிலங்கள் சேதம் அடைந்துள்ளன.
இதன் மொத்த சேத மதிப்பு 16.65 கோடி ரூபாய் என கண்டறியப்பட்டுள்ளது. இயற்கை பேரிடரால் ஏற்பட்டுள்ள சேதத்தை முதற்கட்டமாக கணக்கிட்டதில் சுமார் 8,316 கோடி ரூபாய் என கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 20 ஆயிரம் வீடுகளும், பொதுப்பணித்துறையின் கீழ் போடப்பட்ட 10 ஆயிரம் கிலோ மீட்டர் சாலைகளும் சேதம் அடைந்துள்ளதாக அம்மாநில முதல்வரே அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், வெள்ளம் பாதித்த கேரளாவுக்கு நிவாரணமாக ரூ.10 கோடி வழங்குவதாக அரியானா அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக தமிழக அரசு சார்பாக கேரளாவிற்கு கூடுதலாக ரூ 5 கோடி நிவாரண நிதி அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.