‘நீங்க ஒரு தோற்றுப்போன முதல்வர்’... ஜார்கண்ட் முதல்வரை வெளுத்து வாங்கிய பாஜக தலைவர்...!
பிரதமர் மோடியுடனான உரையாடல் குறித்து ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவு பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் கண்டனங்களை பெற்று வருகிறது.
இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அவ்வப்போது பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
நேற்று ஆந்திரா, ஒடிசா, தெலங்கானா, ஜார்கண்ட் மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக உரையாடி உள்ளார். இதுகுறித்து ஜார்கண்ட் முதலமைச்சர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தன்னுடைய ட்வீட்டில், ‘மதிப்பிற்குரிய பிரதமர் மோடி போனில் அழைத்தார். அவர் என்னுடன் மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசுவது போல் உரையாடினார். பிரச்சனைகளைப் பற்றி கேட்கவோ, தேவைகளைப் பற்றி பேசவோ இல்லை’ என பதிவிட்டிருந்தார்.
அதாவது பிரதமர் மன் கி பாத் உரையில் எப்படி அவர் மட்டுமே பேசுவாரோ, அதேபோல் பேசியதாகவும், தன்னிடம் எதைப் பற்றியும் கேட்கவில்லை, தன்னை பேசவிடவில்லை என்பது போல் மறைமுகமாக குற்றச்சாட்டி இருந்தார். இந்த பதிவு பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் கண்டனங்களை பெற்று வருகிறது.
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான பாபுலால் மராண்டி ஹேமந்த் சோரனை கடுமையாக விமர்சித்துள்ளார். ஹேமந்த் சோரன் ஒரு தோல்வியுற்ற முதல்வர். அவருடைய ஆட்சி தோற்றுவிட்டது. ஜார்கண்ட் மாநிலத்தில் கோவிட்டை கையாளுவதிலும் தோல்வி. மக்களுக்கு உதவுவதிலும் தோல்வி. அவர் அந்த பதவியை வகிக்கவே தகுதி இல்லாதவர். திரு.சோரன் எழுந்து வேலை செய்யுங்கள்... கடிகாரம் ஓடிக்கொண்டிருக்கிறது என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.