GST is the turning point of Indian economy.....PM Modi
சரக்கு மற்றும் சேவை வரித் திட்டம் நாட்டின் பொருளாதாரத்துக்கு திருப்பு முனையாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்
இந்தியாவில் மறைமுக வரி திட்டங்களை சீரமைத்து ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி திட்டம் கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது. வரும் ஜுலை 1 ஆம் தேதி முதல் ஜி.எஸ்.டி. நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது.

இந்நிலையில் டெல்லியில் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்துவதற்கான தயார்நிலை குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சக அலுவலக உயர் அதிகாரிகள், அமைச்சக செயலாளர்கள் கலந்துகொண்டனர்.
இரண்டரை மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில், பிரதமர் மோடி குறிப்பாக ஜி.எஸ்.டி. அமல்படுத்துவதற்கான தகவல்தொழில்நுட்பம், மனிதவளம், பயிற்சி, திறமையான அதிகாரிகள், சந்தேகங்களை போக்கும் வழிகள், கண்காணிப்பு ஆகிய அம்சங்களின் தயார்நிலை குறித்து ஆய்வு செய்தார்.
அப்போது ஜி.எஸ்.டி. ஜூலை 1–ந் தேதி அமல்படுத்துவதற்கு ஏற்ப தகவல்தொழில்நுட்ப கட்டமைப்பு, அதிகாரிகளுக்கான பயிற்சி, வங்கிகள் ஒருங்கிணைப்பு, வரி செலுத்துவோர் பட்டியல் போன்ற அனைத்தும் தயாராக உள்ளதாக பிரதமரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜி.எஸ்.டி.யுடன் இணைக்கப்பட்ட தகவல்தொழில்நுட்பத்தில் மின்னணு பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அதிகாரிகளை பிரதமர் கேட்டுக்கொண்டார்.
அனைத்து வரி செலுத்துவோர், அரசியல் கட்சிகள், வர்த்தகம் மற்றும் தொழிற்சாலைகள் போன்றவைகளை சார்ந்தவர்களின் கருத்தொற்று மைக்கு பின்னர் ஜூலை 1–ந் தேதி ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்படுகிறது.
ஒரே தேசம், ஒரே சந்தை, ஒரே வரி என்பது சாதாரண மனிதருக்கு பலனை தரும் என்றும், இது இந்திய வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத தருணம். நாட்டின் பொருளாதாரத்துக்கு இது ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
