ஆளுநர்கள் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது திருப்பி அனுப்ப வேண்டும் : உச்சநீதிமன்றம்
ஆளுநர்கள் விரைவில் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது திருப்பி அனுப்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட பல முக்கிய மசோதாக்கள் நிலுவையில் இருப்பதாக கூறி, தெலுங்கானா மாநில அரசு, உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில் “ நாடாளுமன்ற ஜனநாயகத்தில், தேவையான ஒப்புதலை ஒத்திவைக்கவோ அல்லது தாமதப்படுத்தவோ ஆளுநருக்கு அதிகாரமில்லை. ஆளுநர் தரப்பில் எந்த ஒரு மறுப்பும், தாமதம் உட்பட, நாடாளுமன்ற ஜனநாயகத்தையும், மக்களின் விருப்பத்தையும் தோற்கடித்துவிடும்..” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. தெலுங்கானா அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே “ சட்டமன்றங்கள் ஆளுநர்களின் தயவில் உள்ளன... ஆளுநர்கள் மசோதாக்களை கிடப்பில் போட முடியாது என்று சட்டப்பிரிவு விதி 200 கூறுகிறது. இறுதியில் ஒவ்வொரு அதிகாரமும் சட்டத்தின் கீழ் உள்ளது.” என்று வாதிட்டார்.
இதையும் படிங்க : உலக ராணுவ செலவு இதுவரை இல்லாத அளவுக்கு உயர்வு.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..?
இதை தொடர்ந்து நீதிபதி, சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட பிறகு ஒப்புதல் பெற அனுப்பப்பட்ட மசோதாக்களை கவர்னர்கள் நிலுவையில் வைக்கக்கூடாது என்று அரசியலமைப்பின் 200வது குறிப்பிடுகிறது என்று தெரிவித்தனர்.
சட்டப்பிரிவு 200ன் விதியானது, நிதி மசோதாக்கள் அல்லாத பிற மசோதாக்களை ஆளுநர்கள் "விரைவில்" திருப்பி அனுப்பி வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடுகிறது. எனவே ஆளுநர்கள் சட்டமன்றங்களில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது திருப்பி அனுப்ப வேண்டும். அவற்றை கிடப்பில் போட முடியாது..” என்று தெரிவித்தனர்
மேலும், தாங்கள் யாரையும் சுட்டிக்காட்டவில்லை, ஆனால் பொதுவாக சட்டத்தை மட்டுமே கூறியுள்ளோம் என்றும் தெரிவித்தனர். இந்த உத்தரவு அனைத்து அரசியலமைப்பு அதிகாரிகளுக்கானது என்று நீதிபதிகள் தெளிவுப்படுத்தினர்.
தமிழ்நாடு உள்ளிட பல மாநிலங்களில் சட்டமன்றங்களில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர்கள் தாமதம் செய்கின்றனர். குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இது அதிகமாக நடக்கிறது. எனவே மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் பேசிய போது, ஒரு மசோதா நிலுவையில் வைக்கப்பட்டாலே அதற்கு ஒப்புதல் இல்லை என்று தான் அர்த்தம் என்று கூறியிருந்தார். அவரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 72 மணி நேர போர் நிறுத்தத்திற்கு சூடான் படைகள் ஒப்புதல்.. வெளிநாட்டினர் வெளியேற்றப்படுவதால் நடவடிக்கை..