இளைஞர்களிடம் வாசிக்கும் பழக்கம் மேம்பட வேண்டும் - ஆளுநர் தமிழிசை
புதுச்சேரியில் நூலகங்களை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் வாசிக்கும் பழக்கம் அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு நூலகங்களை மேம்படுத்து தொடர்பாக ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலை, பண்பாட்டுத்துறை இயக்குனர் கந்தன் என்ற சிவராஜன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அதிகாரிகளுக்கு நூலகங்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவுப்படுத்துமாறு ஆளுநர் உத்தரவிட்டார்.
புதுவை ECR சாலையில் மறியல்: 2 கி.மீ. அணிவகுக்கும் வாகனங்கள்
அதனைத்தொடர்ந்து அவர், முருங்கப்பாக்கம், வில்லியனூரில் உள்ள அரசு கிளை நூலகங்களுக்கு சென்று ஆய்வு நடத்தினார். அப்போது அங்கு படித்துக்கொண்டிருந்த வாசகர்களை சந்தித்து குறை, நிறைகளை கேட்டறிந்தார். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டியை ஆய்வு செய்தார். முருங்கப்பாக்கம் நூலகத்தை ஆய்வு செய்தபோது எம்.எல்.ஏ. பாஸ்கர் என்ற தட்சணாமூர்த்தி உடனிருந்தார்.
இதுதொடர்பாக ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நிருபர்களிடம் கூறுகையில், 'புதுச்சேரியில் உள்ள நூலகங்களை பொதுமக்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை அறிந்து அவற்றை மேம்படுத்த வேண்டும். இளைஞர்கள், சிறுவர்கள் மத்தியில் படிக்கும் பழக்கத்தை மேம்படுத்த வேண்டும். அவர்கள் படிப்பதற்கான தனித்தனி பிரிவுகள் நூலகங்களில் ஏற்படுத்த வேண்டும். ஆராய்ச்சி புத்தகங்கள், போட்டி தேர்வுகளுக்கு படிப்பதற்கான பார்வை நூல்கள் வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்படும்' என்றார்.