கருப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கையால், மக்களிடையே பணப்புழக்கம் குறைந்துவிட்டது. இதனால், தங்க நகை விற்பனை 80 சதவீதம் சரிந்துவிட்டது.
கடந்த 8ம் தேதி இரவு பிரதமர் மோடி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். அன்று நள்ளிரவில் இருந்து நாடு முழுவதிலும் உள்ள தனியார் நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட பல பகுதிகளில் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்தனர்.
இதற்கிடையில், கையில் அதிகளவில் பணத்தை வைத்திருந்த பலர், இரவுவோடு இரவாக அனைத்து நகை கடைகளிலும் முற்றுகையிட்டனர். இதனால், இரவு முழுவதும் நகை வியாபாரம் கனஜோராக நடந்தது. நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை கொண்டு நகைகளை வாங்கினர். சில பகுதிகளில் விடிய விடிய தங்க நகை வியாபாரம் நடந்தது.
வியாபாரம் சூடுபிடித்ததால் தங்கத்தின் விலையும் மறுநாள், எக்ஸ்பிரஸ் வேகதில் உச்சிக்கு சென்றது. ஆனால் நாட்கள் கடந்ததும், தங்கத்தின் விலை குறைய தொடங்கியது. தங்கம் விலை எப்படி குறைந்ததோ அதேபோல் அதன் விற்பனையும் தற்போது சரிந்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை பெரும்பாலான நகை கடைகள், வாடிக்கையாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகின்றன. தங்க நகை விற்பனை 80 சதவீதம் சரிந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து வைரம் மற்றும் தங்க வியாபாரிகள் சங்க பிரதிநிதி ஒருவர் கூறுகையில், பிரதமர் மோடி கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டை ஒழிக்க இந்த திட்டத்தை கொண்டு வந்தார். இந்த திட்டத்தை அறிவித்த சில மணி நேரத்தில் தங்க நகை கடைகளில், மக்கள் கூட்டம் அலைமோதியது.
அடுத்த நாளில் இருந்து, கடைக்காரர்கள் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்துவிட்டனர். அதன்பிறகு வியாபாரம் சுத்தமாக இல்லாமல் போனது. மக்களிடையே பணப்புழக்கம் குறைந்ததே இதற்கு முக்கிய காரணம்.
கடந்த 9ம் தேதி முதல் இன்று வரை தங்க நகை விற்பனை 80 சதவீதம் சரிந்து இருக்கிறது. 20 சதவீத விற்பனை கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலம் வாடிக்கையாளர்கள் நகைகளை வாங்கி செல்வதே ஆகும்.
விற்பனை இல்லாததால் தங்க இறக்குமதியும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எங்களை போல் தங்க நகை பட்டறை தொழில் செய்பவர்களும் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பணப்புழக்கம் மக்களிடையே இயல்பான நிலைக்கு வரும் வரை இதே நிலை நீடிக்கும் என்றார்.
அதே நேரத்தில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள நகைகளை அடகு கடைகளில் வைத்தால் வட்டி அதிகமாகும் என்பதால், கூட்டுறவு வங்கிகளுக்கு செல்கின்றனர். ஆனால், அங்கு பணம் இல்லை என கூறி அவர்களை திருப்பி அனுப்பிவிடுகின்றனர். இதையொட்டி நகை அடகு வைக்க, பணம் மாற்ற, வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முடியாமல் மக்களும் தவிக்கின்றனர்.
