காஷ்மீரில் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் - 2 போலீசார் உள்பட 3 பேர் பலி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு காவலர்கள் உள்பட 4 பேர் பலியாகினர்.
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தீவிரவாதிகள் மட்டும் இன்றி பாகிஸ்தான் ராணுவமும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு வீரர்களைக் கொன்ற பாகிஸ்தான் ராணுவம் அவர்களின் தலையை துண்டிதும் வன்முறை வெறிச்செயலில் ஈடுபட்டது.
பாகிஸ்தானின் மனிதநேயமற்ற இச்செயலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று உயிரிழந்த வீரர்களின் உறவினர்களும் பொதுமக்களும் வலியுறுத்தி வரும் நிலையில், தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
குல்காம் மாவட்டம் மிர்பஜார் பகுதியில் போலீசார் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தீவிரவாதிகள் சிலர் போலீசார் சென்ற வாகனத்தின் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இரண்டு காவலர்கள் உள்பட 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
பதில் தாக்குதல் நடத்தப்பட்டதில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் உதம்பூர் தாக்குதலில் தேசிய பாதுகாப்பு முகமையால் தேடப்பட்டு வந்த தீவிரவாதி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவதால் குல்காம் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.