ரூபாய் நோட்டு வாபஸ் ஒரு சட்டப்பூர்வ திருட்டு - மன்மோகன்சிங் காட்டம்...!
ரூபாய் நோட்டு வாபஸ், ஜிஎஸ்டி ஆகியவை காரணமாக நாட்டின் இறக்குமதி அதிகளவு அதிகரித்ததாகவும், இது சட்டப்பூர்வ திருட்டு என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த நவம்பர் 8-ம் தேதி அறிவித்தது.
இதையடுத்து பழைய ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் வங்கிகளிலும் ரிசர்வ் வங்கியிலும் மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர். ஏராளமானோர் வங்கி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.
பழையா நோட்டிற்கு பதிலாக புதிய 500 ரூபாய் நோட்டும் 2000 ஆயிரம் ரூபாய் நோட்டும் வெளியிடப்பட்டது.
அதன்பிறகு பிரபலங்களின் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் ஏராளமான புதிய ரூபாய் நோட்டுகள் சிக்கின.
மேலும் கறுப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் மோடி களமிறங்கும் போது குடிமகன் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் செலுத்தப்படும் என வாக்குறுதி அளித்தார்.
ஆனால் ஓராண்டு காலம் ஆகியும் இதுவரை அப்பணம் செலுத்தப்படவில்லை. முறையான விளக்கமும் அளிக்கவில்லை.
இந்த முறைகளினால் கறுப்பு முற்றிலும் ஒழியும் என பாஜக தெரிவித்து வந்தது.
இதைதொடர்ந்து வரும் நவம்பர் 8 ஆம் தேதி ரூபாய் நோட்டு மதிப்பு இழப்பை அறிவித்த மோடி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், திமுக உள்ளிட்ட கட்சிகள் முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், ஆமதாபாத் நகரில் தொழில் அதிபர்கள் மத்தியில் மன்மோகன் சிங் பேசினார். அப்போது, ரூபாய் நோட்டு வாபஸ், ஜிஎஸ்டி ஆகியவை காரணமாக நாட்டின் இறக்குமதி அதிகளவு அதிகரித்ததாகவும், இது சட்டப்பூர்வ திருட்டு என தெரிவித்தார்.
புல்லட் ரயில் திட்டம் வீண் பெருமைக்காக கொண்டு வரப்பட்ட திட்டம் எனவும் அகல ரயில் பாதை குறித்து பிரதமர் ஆலோசனை நடத்தாதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.
புல்லட் ரயில் திட்டத்தை எதிர்ப்பவரை நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர் எனவும், ஜிஎஸ்டி ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் எதிர்ப்பவர் வரி ஏய்ப்பாளர் என கருதுவதும் ஜனநாயக மாண்புகளுக்கு எதிரானது என குறிப்பிட்டார்.