ஆதித்யநாத் அதிரடியை பின்பற்றும் அம்ரிந்தர் சிங்... உ.பி.போல விவசாயிகளுக்கு பயிர்கடன் தள்ளுபடி பண்ணும் பஞ்சாப்!
பஞ்சாப் மாநில விவசாயிகளுக்கும் பயிர் கடன் தள்ளுபடி செய்ய நாங்கள் உறுதி அளித்து இருக்கிறோம். மத்திய அரசின் உதவி இல்லாமல், அதற்கான நடவடிக்கைகளை விரைவில் எடுப்போம் என்று மாநில முதல்வர் அமரிந்தர் சிங் நேற்று தெரிவித்தார்.
உ.பி.யில் தள்ளுபடி
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆளும் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதிய ஜனதா அரசு கடந்த வாரம், விவசாயிகளுக்கான பயிர் கடனான ரூ. 36 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்தது. அதைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலமும் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய உள்ளது.
சண்டிகரின், ஜிர்காபூரில் ‘டி-மார்ட்’ எனும் சூப்பர் மார்க்கெட் கடையை முதல்வர் அமரிந்தர் சிங் நேற்று திறந்து வைத்தார். அதன்பின் நிருபர்களிடம் அவர் பேசியதாவது-
மாநிலஅரசு ஏற்கும்
பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகளுக்கு பயிர்கடன் தள்ளுபடி குறித்து மத்திய அரசிடம் உதவி கோரி இருக்கிறோம். ஒருவேளை மத்திய அரசிடம் இருந்து எங்களுக்கு உதவி ஏதும் கிடைக்காவிட்டால், விவசாயிகளின் பயிர்கடன் சுமையை மாநில அரசே ஏற்றுக்கொண்டு தள்ளுபடி செய்யும். ஏனென்றால், அதற்கான மனநிலைக்கு மாநில அரசு ஏற்கனவே வந்துவிட்டது.
போதை மருந்து
காங்கிரஸ் கட்சி தேர்தல் நேரத்தில் மக்களிடம் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும். மாநிலத்தில் போதைப் பொருள் பிரச்சினையை தீர்ப்போம் என்று கூறினோம். அதைச் செய்து வருகிறோம். இதற்காக சிறப்பு போலீஸ் படையை மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ஹர்பிரீத் சிங் சித்து தலைமையில் அமைக்கப்பட்டு, அந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர இருக்கிறோம்.
ஊழலை ஒழிப்போம்
மாநிலத்தில் இருந்து ஊழல் எனும் அரக்கனை முற்றிலும் ஒழிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம். மாநிலத்தின் பொருளாதார நிலை குறித்து விரைவில் எங்கள் அரசு வெள்ளை அறிக்கை வெளியிட இருக்கிறோம். அப்போதுதான் இதற்கு முன் இருந்த அகாலி தளம், பாஜனதா கூட்டணி அரசு மாநிலத்தின் நிதிநிலையை எப்படி வைத்திருந்தது என்பதை மக்களுக்கு தெரிவிக்க முடியும்.
அதேபோல, முக்கிய பிரச்சினையாக இருக்கும் சட்டவிரோத சுரங்கத் தொழில், இயற்கை வளங்களை சுரண்டுதல் போன்ற நடவடிக்கையும் முடிவுக்கு கொண்டு வரப்படும்.
பஞ்சாப் மீளும்
எங்களின் தீவிர முயற்சியால், பஞ்சாப் மீண்டும் உயர்ந்த நிலைக்கு வரும். முதலீட்டார்களுக்கு உகந்த மாநிலமாகவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மாநிலமாகும் மாற்றுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.